வேகமாக வந்த லாரி மோதி தீபா பிரசார வாகனம் நசுங்கியது.. திட்டமிட்ட சதியா?
சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்துள்ளார். சசிகலாவை விரும்பாத அதிமுகவினர் தீபாவை தேடி போகின்றனர். ஆனால் தீபாவோ ஆரம்பத்தில் சசிகலாவை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருந்தார்.
இந்நிலையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பை தொடங்கிய தீபா, ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். கடந்த ஒருவாரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின் போது டி.டி.வி. தினகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பன்னீர் மீது பாய்ச்சல்
சமீபமாக, ஓபிஎஸ்யையும் கடுமையாக சாடி வருகிறார். ஜெயலலிதா பெயரை போலியாக பயண்படுத்துவதாக பன்னீர்செல்வத்தை தாக்கி பேசி வருகிறார். திடீரென, ஓபிஎஸ் அணியை சார்ந்தவர்கள் தீபாவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தேர்தல் அதிகாரியிடம் தீபா பேரவையினர் புகார் அளித்து பரபரப்பும் கிளப்பினர்.
வாகனம்
இந்த நிலையில் தீபா பயன்படுத்தும் பிரசார வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. தண்டையார் பேட்டை ஏ.இ.கோயில் தெருவில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிரசார வாகனத்தின் மீது லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நசுங்கிய கார்
லாரி அதி வேகமாக மோதியதால், பிரசார வாகனம் கடுமையான சேதமடைந்து நசுங்கியது. பரபரப்பான சூழ்நிலையில் தீபாவின் பிரச்சார வாகனம் விபத்தில் சிக்கி இருப்பது தீபா பேரவை நிர்வாகிகளுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சதி திட்டமா?
அரசியலில் இருந்து ஓடாவிட்டால் ஆள் இருக்கும்போதே இப்படித்தான் லாரியை விட்டு மோதச் செய்வோம் என்று, அரசியல் எதிரிகள் அச்சுறுத்துவதன் சமிக்ஞைதான் இதுவா என சந்தேகிக்கிறார்கள் தீபா பேரவை நிர்வாகிகள்.