தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவது எப்படி? குழப்பத்தில் தங்க தமிழ் செல்வன்
தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவது எப்படி என்ற குழப்பத்தில் தங்கதமிழ் செல்வன் இருக்கிறார்.
சென்னை: தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது எப்படி என்று தெரியாமல் தங்கதமிழ் செல்வன் குழப்பத்தில் உள்ளார்.
முதல்வருக்கு எதிராக நம்பிக்கை இல்லை என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடிதம் அனுப்பினர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று சபாநாயகர் அவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரியே என்றார். மற்றொரு நீதிபதி சுந்தரோ சபாநாயகர் எடுத்த நடவடிக்கை தவறானது என்றார்.
நியமனம்
இதனால் இந்த வழக்கு 3ஆவது நீதிபதியின் பார்வைக்கு சென்றது. 3-ஆவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். இதற்கு தினகரன் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடியது. மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணாவை நியமித்தது.
தினமும் விசாரணை
வரும் 23-ஆம் தேதி 5 நாட்களுக்கு விசாரணை நடத்துவதாக தெரிவித்தார். தனது வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ் செல்வன் முயற்சித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் எங்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள 3-வது நீதிபதி தினமும் வழக்கை விசாரிக்க போவதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
சிக்கல் நிலவுகிறது
விசாரணை முடிந்ததும் தீர்ப்பையும் விரைந்து சொன்னால் தொகுதி மக்களுக்கு நல்லது. தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறப் போவதாக ஏற்கனவே நான் கூறி இருந்தேன். ஆனால் எந்த நீதிபதியிடம் இதை கொடுப்பது என்பதில் சிக்கல் நிலவுகிறது.
3ஆவது நீதிபதியிடமா?
இரு நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறி உள்ளதால் அவர்கள் இருவர் முன்னிலையில் மனு கொடுக்க வேண்டுமா? அல்லது 3-வது நீதிபதியிடம் வாபஸ் மனுவை கொடுக்க வேண்டுமா? என்ற சட்ட சிக்கல் ஏற்படுகிறது.
விளக்கம் அளிப்பேன்
மனு கொடுத்தாலும் அதை நீதிபதிகள் ஏற்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே இதுபற்றி மூத்த வக்கீல்களுடன் ஆலோசித்த பிறகு தான் முடிவு செய்ய முடியும். தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்ததற்காக எனக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீசு அனுப்பி இருந்தார். அந்த கடிதத்துக்கு பதில் அளிக்க நாளை மறுநாள் நான், ஐகோர்ட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விளக்கம் அளிப்பேன் என்றார்.