ஸ்டாலின் கைதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்.. பதற்றம்!
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதை கண்டிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் திமுக உறுப்பினர்கள் மறியல் செய்தனர். திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றத்தை கண்டித்தது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
திமுக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி கட்சியினரும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜாஜி சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே 100க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.