எடப்பாடி- தினகரன் மோதல் உச்சகட்டம்: நமது எம்ஜிஆரில் அமைச்சர்கள் செய்திக்கு அதிரடி தடை!
முதல்வர் எடப்பாடி மற்றும் டிடிவி தினகரன் இடையேயான மோதலின் உச்சகட்டமாக நமது எம்ஜிஆரில் முதல்வர், அமைச்சர்கள் செய்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி மற்றும் தினகரன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்ஜிஆரில் முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் செய்திகள் எதுவும் இடம்பெறக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினகரன் திஹார் சிறைக்கு போனதுதான் தாமதம்.. அதிமுகவை அப்படியே எடப்பாடி தலைமையில் கொங்கு கோஷ்டி வளைத்துவிட்டது.
தினகரன் திணறல்
சிறையில் இருந்து மீண்டு வந்த தினகரனால் அதிமுகவுக்குள் கோலோச்ச முடியவில்லை. என்னதான் எம்.எல்.ஏக்கள் தொடர்ச்சியாக தினகரனை சந்தித்தாலும் அதிமுகவில் தினகரனால் தலையெடுக்க முடியவில்லை.
தினகரன் கணக்கு
எடப்பாடியும் திவாகரனும் கைகோர்த்துக் கொண்டு தினகரனுக்கு செக் வைத்தனர். ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி பாஜகவை மிரட்டலாம் என தினகரன் கணக்குப் போட்டார்.
அதிரடி தடை
ஆனால் அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆரில் முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் தொடர்பான எந்த ஒரு செய்தியும் இடம்பெறுவதில்லை.
எதையும் சந்திப்போம்
சசிகலா ஆதரவு செய்திகளும் மாவட்ட செய்திகளும்தான் அதிகம் இடம்பெற்றுள்ளன. சென்னையில் இன்று அமைச்சர் சண்முகத்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியும் எழுப்பினர். ஆனால் அமைச்சர் சண்முகமோ, நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை; எதையும் எதிர்கொள்ள தயார் என ஆவேசமாக கூறினார்.