குடி போதையில் வந்த 'அனஸ்தீசியா' டாக்டர்: போதை தலைக்கேறி மயக்கம்- பொதுமக்கள் தர்ணா!
திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு மருத்துவமனையில் பணிக்கு வந்த மயக்கவியல் டாக்டர் ஒருவர் நேற்று குடிபோதையில் வந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை தலைக்கேறிய உடன் அந்த டாக்டர் மருத்துவமனையிலேயே பூட்டி படுத்துக்கொண்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மயக்கவியல் சிறப்பு மருத்துவர் காந்தி, வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை மருத்துவமனைக்கு வந்த வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
மதிய உணவு இடைவேளை சமயத்தில் மதுஅருந்திவிட்டு வந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதையறிந்த பொதுமக்கள், மது அருந்திவிட்டு சிகிச்சையளிக்கும் மருத்துவரை கண்டித்து பல்லடம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், போதை தலைக்கேறிய மருத்துவர் காந்தி தனது ஓய்வு அறைக் கதவை உள்பக்கமாக தாழ் போட்டுவிட்டு உள்ளே படுத்து விட்டார். மருத்துவர் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனடியாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தலைமை மருத்துவர் சந்திராவிடம் திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பி.இராமசாமி, மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் மருத்துவர் கே.பாண்டியராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பி.ராமசாமி, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜன் மற்றும் மாநில சுகாதாரத் துறை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் ஆலோசனைபடி மருத்துவர் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.