16வது லோக்சபா: 186 எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்கு இருக்கு- பாஜகவில் 98 பேர்!
சென்னை: 16வது லோக்சபாவிற்கான புதிய எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பிக்களில் மூன்றில் ஒருவர் குற்றப்பின்னணி உடையவர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள அபிடவிட்டில் குறிப்பிட்டிருந்த தகவல்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டதில் இது தெரியவந்துள்ளது.
541 வேட்பாளர்களின் பின்னணி
நேஷனல் எலக்ஷன் வாட்ச் (நியூ) மற்றும் ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு (ஏ.டி.ஆர்), மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 543 வேட்பாளர்களில் 541 வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியது.
186 எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்கு
அதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 186 எம்.பிக்கள் அதாவது 34 சதவீத எம்.பிக்கள் தங்களது வேட்பு மனுத்தாக்கலில் (எலக்சன் அபிடவிட்) தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கொலை முயற்சி
இந்த 186 புதிய எம்.பிக்களில் 112 பேர் கொலை, கொலை முயற்சி, மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்தல், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக மிக தீவிரமான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் 98
கட்சி வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக பா.ஜ.க.வின் வெற்றி பெற்ற 281 வேட்பாளர்களில் 98 பேர் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்
அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் 44 வேட்பாளர்களில் 8 பேரும், சிவசேனாவின் 18 வேட்பாளர்களில் 15 பேரும், திரிணாமுல் காங்கிரசின் 34 வேட்பாளர்களில் 7 பேரும் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தேர்தல் அபிடவிட்டில் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்த கிரிமினல் எம்.பிக்கள்
2009-ல் இது 30 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோடீஸ்வர எம்.பி.க்கள்
இதேபோல 82 சதவிகித எம்.பிக்கள் கோடீஸ்வரர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 2009ம் ஆண்டு 58 சதவிகித எம்.பிக்களும், 2004ம் ஆண்டு 30 சதவிகித எம்.பிக்களும்தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர். பத்தாண்டுகளில் கோடீஸ்வர எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் அதிகம்
இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி, தெலுங்கானாராஷ்டிரிய சமீதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள்தான் சராசரியாக 50 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குண்டூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஜெயதேவ் 683 கோடிக்கு சொந்தக்காரராம்.
ஏழை கம்யூனிஸ்ட்கள்
காங்கிரஸ், பாஜக, அதிமுக, ஆம்,ஆத்மி கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் கோடீஸ்வரர்களாக உள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் லட்சாதிபதிகளாகத்தான் இருக்கின்றனராம்.
புதுமுக அதிமுக எம்.பிக்கள்
தமிழகத்தில் இருந்து 31பேர் புதுமுகங்களாக லோக்சபாவிற்குள் நுழைகின்றனர். அதிமுகவில் திருப்பூர் சத்யபாமா, தென்காசி வசந்தி முருகேசன், காஞ்சிபுர மரகதம் குமாரவேல், திருவண்ணாமலை வனரோஜா ஆகிய பெண் எம்.பிக்களும் புதுமுகங்கள்தான்.
தமிழகம் டு டெல்லி
அதேபோல தென் சென்னை ஜெ.ஜெயவர்த்தன், மத்தியசென்னை எஸ்.ஆர்.விஜயகுமார், ஸ்ரீ பெரும்புதூர் கே.என்.ராமச்சந்திரன், நாமக்கல் பி.ஆர்.சுந்தரம், மதுரை கோபாலகிருஷ்ணன், நீலகிரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் முதன்முறையாக லோக்சபாவிற்குள் நுழைகின்றனர்.
டாக்டர், வக்கீல்கள்
தவிர தமிழகத்தில் இருந்து தேர்வான எம்.பிக்களில் 4பேர் டாக்டர்கள், 15 பேர் வக்கீல்கள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளும் அடங்குவர்.