தஞ்சையில் டிராக்டர் கடன் கட்ட தாமதம்... விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்
தஞ்சாவூர்: ரூ. 9000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா எல்லாம் ஈசியாக நாட்டை விட்டு ஓடிப்போக, தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சையில் டிராக்டருக்காக வாங்கிய கடனுக்கான கடைசி தவணையை செலுத்தவில்லை என்று கூறி விவசாயி ஒருவரை அடித்து இழுத்து சென்றுள்ளனர் போலீசார். இது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன்,50. கடந்த 2011ம் ஆண்டு தஞ்சையில் உள்ள கோட்டக் மகேந்திராவின் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கியுள்ளார். இந்தக் கடனுக்காக தலா ரூ.64 ஆயிரம் வீதம் 6 தவணைகளைச் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடைசி 1 தவணை நிலுவை இருந்ததாகவும், நெல் அறுவடை முடிந்த பின்னர் தவணைத் தொகையைச் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள், ரூ.32 ஆயிரத்தை முதலில் செலுத்துங்கள் என்று கூறி, அந்த தொகையைப் பெற்றுள்ளனர். சில நாட்கள் கழித்து அவரது டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4ம் தேதியன்று நெல் அறுவடையில் பாலன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் இருந்து பாலனை கீழே தள்ளி, சரமாரியாக அடித்தனர். பின்னர் அவரைக் காவல் நிலையத்துக்கு கையை பிடித்து இழுத்துச் சென்றதுடன், டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், அவரை விடுவிக்கவும் அவரது உறவினர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவரை போலீசார் விடுவித்துள்ளனர்.
இதற்கிடையில், டிராக்டரில் அமர்ந்திருந்த விவசாயி பாலனை கீழே தள்ளி, போலீசார் அடித்து, இழுத்துச் சென்ற வீடியோ, வாட்ஸ்அப் மூலம் நேற்று பரவியது. இது, டெல்டா விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த சோழகன்குடிக்காடு கிராமம், தமிழக விவசாயத் துறை அமைச்சர் வைத்திலிங்கத்தின் தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவலறிந்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பாலனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், ஒரத்தநாட்டில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஒரத்தநாடு வட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விவசாயி தாக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி வெ.ஜீவக்குமார் கூறும்போது, "தனியார் நிதி நிறுவனங்கள் கூலிக்கு ஆட்களை நியமித்து, சட்டத்துக்குப் புறம்பாக, விவசாயிகளின் டிராக்டர் போன்ற வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றன. இதை, உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. விவசாயக் கடன் தாவாவில், போலீஸார் நேரடியாக தலையிட்டது சட்டப்படி குற்றம். விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட போலீஸாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
9000 கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கிய விஜய் மல்லையா எல்லாம் ஈசியாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஒரு ஒரு தவணை கட்டத் தவறிய விவசாயியை அடித்து இழுத்துச் சென்று போலீசார் அவமானப்படுத்தியுள்ளனர் என்பது டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.