தமிழக நலன்களை காவு கொடுக்கும் தமிழக அரசு... ஜி ராமகிருஷ்ணன் காட்டம்
நீட் விவகாரத்தின் தமிழக நலன்களை மாநில அரசு காவு கொடுத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆவேசமாக தெரிவித்தார்.
நெல்லை: தமிழக மக்களின் நலன்களை அதிமுக அரசு காவு கொடுத்து வருவதாக நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அதிமுக தவிர்த்து அனைத்து கட்சியினர் பாளை ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தங்கள் பதவியை தக்க வைக்க குறியாக உள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன் வடிவை சரியான நேரத்தில் முன் வைக்க அவர்கள் தவறி விட்டனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா வரவே இல்லை என ஜனாதிபதியே கூறிய பின்னரே அவசர அவசரமாக மற்றொரு சட்ட மசோதாவை அனுப்பி வைத்தனர். நீட் தேர்வில் இருந்து ஒராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவரது வாக்குறுதியை நம்பி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். மத்திய அரசு 9 இடங்களில் மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகிறது. இந்த கல்லூரிகளில் நீட் தேர்வு கிடையாது. அப்படி இருக்கும் போது தமிழகத்திற்கு ஏன் விலக்கு அளிக்க கூடாது.
அதிமுக பொது குழுவில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை. தமிழக மக்களின் நலன்களை அதிமுக மத்திய அரசிடம் தொடர்ந்து காவு கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications