எண்ணூர் துறைமுகத்தில் அதானி சரக்கு முனைய தொடக்க விழா - மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்பு
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சரக்கு முனையம் உள்ளிட்ட 5 முக்கிய திட்டப்பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தொடக்கி வைத்தார்.
சென்னை : எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சரக்கு முனையம், சரக்கு ரயில் முனையம் உள்ளிட்ட ஐந்து முக்கிய திட்டப்பணிகளை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தொடங்கி வைத்தார்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதானி குழுமம் சார்பில் ரூ. 1,270 கோடியில் புதிய அதிநவீன சரக்கு பெட்டக முனையம் அமைக்க கடந்த 2014-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் தற்போது ரூ. 724 கோடியில் சரக்கு பெட்டக முனையம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.
ஐந்து திட்டப்பணிகள்
செட்டிநாடு நிறுவனம் சார்பில் 151கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சரக்கு ரயில் பாதை, சரக்கு முனைய இ-அலுவலகம், நுழைவுவாயில் திட்டம் உள்ளிட்ட ஐந்து திட்டப் பணிகளை அமைச்சர் நிதின் கட்காரி இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் .
மத்திய மாநில அமைச்சர்கள்
இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் எம்பி வேணுகோபால், நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலராமன் கேபிபி சாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொன்னார் ஜெயக்குமார்
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அதிகம் நெருக்கம் காட்டினார்.
அருகருகே அமர்ந்து தமிழக அரசியல் நிலவரங்களை பேசினர்.
மியூசிக் சேர்
தமிழக அரசையும், அமைச்சர்களையும் அதிகம் கிண்டலடித்து வருகிறார் பொன். ராதாகிருஷ்ணன். தமிழக முதல்வர் நாற்காலிக்கும், அமைச்சர்கள் நாற்காலிக்கும் மியூசிக் சேர் நடக்கிறது என்றும் நேற்று கிண்டலடித்திருந்தார். அதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் தமிழக அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணனுடன் சிரித்து பேசியது அங்கு வந்திருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.