வேகாத அரிசிச் சோறுக்கு ரூ 150 பிடித்தமா?... வாக்கு எண்ணிக்கையை கண்காணித்த ஊழியர்கள் கோபம்
நாகர்கோவில்: தேர்தல் வாக்கு எண்ணி்க்கையை கண்காணித்த ஊழியர்களின் சம்பளத்தில் சாப்பாட்டுக்கு என பாதியை கழித்து விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி தொகுதி வாக்கு எண்ணிக்கை கடந்த 16ம் தேதி நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கட்டிடத்தில் நடந்தது. அன்று காலை முதலே அலுவலர்கள் வருகைக்காக காத்திருந்தனர். மொத்தம் இந்த பணியில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
காலை 5 மணிக்கு வந்த இவர்கள் இரவு 9 மணிக்கு மேல் வரை பணியாற்றியுள்ளனர். இந்த நிலையில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு சம்பள பண விநியோகம் நடந்தது. இதில் தேர்தல் பணி உதவியாளர்களுக்கு சம்பளமாக ரூ.300 மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ரூ.150ஐ சாப்பாட்டு செலவு என பிடித்தம் செய்து விட்டதால் தேர்தல் பணி உதவியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
மேலும், தேர்தல் பணி செய்த ஊழியர்களுக்கு சரியாக வேகாத உணவுகளை வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பலர் அந்த உணவை தொடவேயில்லையாம்.
இ்ந்த நிலையில் அந்த சாப்பாட்டுக்காக ரூ.150ஐ அதிகாரிகள் பிடித்தம் செய்து கொண்டதால் தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மதிய உணவு கொண்டு செல்ல அனுமதி இல்லாததால்தான் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையத்தில் வழங்கப்பட்ட உணவை பெற்றுக் கொண்டோம். அதுவும் சரியில்லாமல் இருந்தது. இப்போது அதற்காக ரூ.150ஐ பிடித்தம் செய்துள்ளனர் அதிகாரிகள். இதனால், இனி வரும் காலங்களில் தேர்தல் பணி செய்வது குறித்து கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டியுள்ளது' என காட்டமாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications