நிர்மலா தேவி விவகாரம்... உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு... விசாரணை அதிகாரியை நியமித்தார் ஆளுநர்
நிர்மலா தேவி மாணவிகளை தவறான விதத்தில் அணுகிய விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோவில் பேசியது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.
விருதுநகர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ள நிர்மலா தேவி, அங்கு படிக்கும் மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்து உயரதிகாரிகளுடன் படுக்கையை பங்கிட்டு கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து மாணவிகள் ஆடியோ ஆதாரத்துடன் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். போலீஸில் புகாரின் பேரில் நிர்மலா தேவியை கைது செய்ய அருப்புக்கோட்டை போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றனர்.
எனினும் அவர் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டுவெளியே வராமல் 7 மணி நேரமாக இருந்துள்ளார். இதையடுத்து கணவர் சரவணபாண்டி, சகோதரர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் பூட்டை உடைத்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் மதுரை பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் படி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அறிக்கையில் கூறுகையில் குற்றவாளிகள் யாரும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் சந்தானம் விசாரணை நடத்துவார் என ஆளுநர் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சந்தானம் தமிழக அரசின் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருந்து ஓய்வு பெற்றவர். மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உறுப்பினராக உள்ளார்.