சென்னையில் இருந்து புறப்பட்டது முதல் ஹஜ் விமானம்... 450 பயணிகள் புனித யாத்திரை!
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
சென்னை : சென்னையில் இருந்து 221 பெண்கள் உள்பட 450 பேருடன் ஹஜ் பயணத்தில் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,468 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் காலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 221 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர். புனித ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் ஆகியோர் சால்வைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 11 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை விமானநிலையத்தில் 3-வது நுழைவு வாயில் ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலைய ஆணையரகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனியாக கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications