டெங்கு பாதிப்பு: சேலத்தில் மத்திய குழு ஆய்வு.. குடிநீர் தொட்டிகளை மூட அறிவுரை!
டெங்குவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சேலம் மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சேலம்: டெங்குவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சேலம் மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சலின் வீரியம் குறைந்தபாடில்லை.
டெங்கு காய்ச்சலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளும் டெங்கு பாதித்தோரால் நிரம்பி வழிகிறது.
சேலத்தில் 80 பேர் பலி
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிரம்பி வழியும் மருத்துவமனை
சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வருவதால் ஒரு படுக்கைக்கு இரண்டு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சேலத்தில் நாள்தோறும் டெங்குவால் 3 முதல் 6 குழந்தைகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தியக் குழு ஆய்வு
முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியக் குழு இன்று சேலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்,
கிரமங்களில் ஆய்வு
அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டன்பட்டி, பல்பாக்கி கிராமங்களில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.
குடிநீர் தொட்டிகளை மூட அறிவுரை
அப்போது குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மத்தியக்குழுவினர் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தின் பல இடங்களிலும் மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்த உள்ளனர்.
சுகாதார நிலையங்களில் ஆய்வு
இதேபோல் சென்னையை அடுத்த மேடவாக்கத்திலும் டெங்கு பாதிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது. அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஏற்பாடுகள் குறித்து மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது.