தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 12ம் தேதி இரவு முதல் பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த நீரே வடியாத நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய புயல் ஆய்வு பிரிவு இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில்,
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரை பகுதிகள் நோக்கி நகரும். இதனால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும்.
பிற மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவும், தமிழக அரசும் தயார் நிலையில் உள்ளது.
மழை குறித்து வருவாய்த் துறை கமிஷனர் அதுல்யா மிஸ்ரா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து கலெக்டர்களும் உயிரிழப்பு மற்றும் சேதத்தை தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், விடுமுறை நாளாக இருந்தாலும் அலுவலகம் வந்து மழை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டும்.
அனைத்து அலுவலர்களுக்கும் தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்பு பணியில் ஈடுபட தேவையான குழுக்களை அமைக்க வேண்டும். அனைத்து துறைகளின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து மாவட்டம் இயல்பு நிலையில் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கனமழை குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'நவம்பர் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் மிக அதிக அளவு மழை பெய்யக்கூடும்' என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனவே, தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மாவட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் இருந்து, முன்எச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.