பணப் பிரச்சினை... ஓசூர் பள்ளியில் மாணவர்கள் மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து!
ஓசூர்: ஓசூரில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இடையே உண்டான மோதலில், மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபகாலமாக வகுப்பறைகளில் மாணவர்களின் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளது பெற்றோர் மற்றும் ஆசிரியர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை ஓசூர், ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே மோதல் உண்டானது. இதில், அஸ்வத் உல்லா, முஜித் பேக் மற்றும் வேணுகோபால் என்ற மூன்று மாணவர்கள் சேர்ந்து, அலசநத்தத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்ற மாணவரைக் கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில், இடது கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அசோக்கை ஆசிரியர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மாணவர்களுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்ததாகவும், அதுவே மோதலுக்கான காரணம் என மற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஓசூர் டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.