தாய் தந்தை திருமண நாளில் தாயிடம் ஆசி பெற்ற அழகிரி: 2 மாதங்களில் நல்ல செய்தி சொல்வாராம்
மதுரை: தி.மு.க.,வில் இணைவதில் என் நிலைப்பாடு குறித்து, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி சொல்ல இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். பெற்றோர் திருமண நாளை ஒட்டி நேற்று, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி. தன் தாய் தயாளுவை சந்தித்து ஆசி பெற சென்னை வந்த மு.க.அழகிரி இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சி விரோத நடவடிக்கைக்காக, தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. அதைத் தொடர்ந்து, தி.மு.க.,வுக்கு எதிராகவும்; கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராகவும், கடும் விமர்சனங்களை கூறி வருகிறார். இதனால் கட்சியினரும், ஸ்டாலினும், அழகிரி மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்ட நிலையிலும் தன் தாய் தயாளுவை அவ்வப்போது சந்தித்து வருகிறார் அழகிரி.
தாயிடம் அழகிரி ஆசி
கருணாநிதி - தயாளுவின், 71வது திருமண நாள், நேற்று, கொண்டாடப்பட்டது. உறவினர்கள் காலையிலேயே கோபாலபுரம் வந்து, இருவரிடமும் ஆசி பெற்றனர். மதியம், 3:00 மணிக்கு சென்னை வந்த அழகிரி, மாலையில் கோபாலபுரம் சென்றார். தாய் தயாளுவை சந்தித்து, உடல் நலம் விசாரித்ததோடு, அவரது திருமண நாளை ஒட்டி, ஆசியும் பெற்றார்.
கருணாநிதியை சந்திக்கவில்லை
தி.மு.க., முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக, கருணாநிதி, அறிவாலயம் சென்று விட்டார். அதனால் மாலை வரை, இருவரும் சந்திக்கவில்லை. கருணாநிதியை நேற்று அழகிரி சந்தித்துப் பேசுவார் என்று கூறப்பட்ட நிலையில் கருணாநிதியை சந்திக்காமலேயே திரும்பினார் அழகிரி.
நல்ல செய்தி சொல்வேன்
இதனிடையே மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்த அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறித்து தான் எழுப்பிய குற்றச்சாட்டுகள், கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அதற்கு இதுவரை பதில் வரவில்லை.
நல்லா ஓட்டுங்க
தி.மு.க.,வில் இணைவதில் என் நிலைப்பாடு குறித்து, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி சொல்வேன் என்றார். நான் ஏற்கனவே சொன்னதையும்; சொல்லாததையும் வைத்து, பத்திரிகையாளர்களான நீங்கள், ஒரு மாதம் ஓட்டி விட்டீர்கள்; இப்பவும் ஓட்டுங்கள்.
கருத்துக்கணிப்புகள்
செப்டம்பர் 2ம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கருத்துக் கணிப்புகள் மூலம் முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் கனவு காண்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில் ஸ்டாலினை முன்னிறுத்தியதால்தான் திமுக தோல்வி அடைந்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுகவுக்கு பின்னடைவே ஏற்படும் என கூறியிருந்தார்.
ஸ்டாலின் பதில்
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், தான் ஒருபோதும் முதல்வராக ஆசைப்படவில்லை. அடுத்த முறையும் கருணாநிதி தான் முதல்வர் என தெரிவித்திருந்தார். அழகிரிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஸ்டாலினை வேதனைப்படுத்துவதா?
அழகிரியின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்திருந்த திமுக தலைவர் கருணாநிதி, ‘‘6-வது முறையாக கருணாநிதிதான் முதல்வராக இருப்பார் என ஸ்டாலின் பலமுறை கூறிய பிறகும் அவரை ஏன் வேதனைப் படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை'' என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அழகிரி இன்னும் 2 மாதத்தில் பதில் சொல்வதாக கூறியுள்ளார்.