கமலுக்கு சபாஷ்!! ஆனால் பிக் பாஸ்-க்கு இல்லை!!
கிராம பஞ்சாயத்துக்களின் முக்கியத்துவத்தினை கமல் பேசினார்.
சென்னை: நேற்றைய பிக்பாஸ் ஓரளவு நன்றாக இருந்தது. அதற்கு காரணம் கமல் முன்னெடுத்த இரண்டு விஷயங்கள்தான்.
வழக்கமாக பிக்பாஸில் வரும் போலித்தனமான செயல்கள், கலாட்டா, இதையெல்லாவற்றையும் விட்டுவிடலாம். அதையெல்லாம் இந்த சீசன் முறை ஒன்றும் செய்ய முடியாது. வர்த்தக ரீதியான செயல்பாடுகளுக்கு பிக் பாஸ் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன?
முதல்வர் வேண்டுகோள்
இந்த வாரம் கமல் பேசிய இரண்டு வார்த்தைகள் கவனிக்கத்தக்கவையாக இருந்தன. கால அவசியத்துக்கு தேவையானவைகளாக இருந்தன. அதில் ஒன்று, அண்டை மாநிலத்துக்கு உதவி செய்வது. அடிப்படையிலேயே கேரள முதல்வர் பினராயி விஜயன்மீது தனிப்பட்ட பாசமும், மரியாதையும் வைத்திருப்பவர் கமல். அதனால்தான் பினராயி விஜயனின் குணங்களை சில இடங்களில் மறக்காமல் பேசி வருகிறார். தற்போது அழிவை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கும் கேரளாவின் வெள்ளத்திற்கு உதவும்படி அம்மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆன் தி ஸ்பாட் - உதவி
முதல்வரின் இந்த வேண்டுகோள் விடும்நேரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக ஆன் தி ஸ்பாட் என்பார்களே, அதுபோல விஜய் டிவி நிர்வாகத்துடன் இணைந்து வெள்ள நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். தன் பங்காக ரூ.25 லட்சம், விஜய் டிவியின் பங்காக ரூ.25 லட்சம் என 50 லட்சம் ரூபாய் அந்த தருணத்திலேயே அந்த மேடையிலேயே அறிவித்து வழங்கியது பாராட்டுக்குரியது. முன்னுதாரணத்திற்கு எடுத்துக்காட்டானது. "கடவுளின் தேசம் க(த)ண்ணீர் தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது. கலாசார ரீதியாக ஒருசில வேற்றுமைகளை கொண்டிருந்தாலும் அரசியலால் பிரிந்திருந்தாலும் ஒரு தேசத்தவராக ஒன்றுகூட வேண்டிய தருணமிது" என்றார்.
குடவோலை முறை
இரண்டாவது விஷயம் கிராம பஞ்சாயத்துக்களை பற்றி எடுத்துரைத்தது. உண்மையிலேயே இப்போதுள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கு கிராம பஞ்சாயத்து என்பதும், குடவோலை முறை என்றால் என்ன என்பதும் தெரியாத ஒன்றுதான். இந்த குடவோலை முறை என்பது சோழர் காலத்தில் இருந்த ஒன்று. ஒரு கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக அந்த காலத்தில் நடத்தப்பட்ட தேர்தல் முறைதான் இது. அதன்படி, அந்தந்த ஊரில் உள்ள மக்கள் பொது இடத்தில் ஒன்றாக கூடுவார்கள்.
ஒரு தகராறும் வராது
தங்களுக்கு பிடித்தமான தலைவரின் பெயரை ஒரு ஓலைச்சுவடியில் எழுதுவார்கள். அந்த எல்லா ஓலைச்சுவடிகளையும் ஒரு பானைக்குள் போட்டு குலுக்குவார்கள். பிறகு ஒரு சிறு பிள்ளையை அழைத்து ஒரு ஓலையை எடுத்து தர சொல்லுவார்கள். அந்த ஓலையில் யார் பெயர் வருகிறதோ அவர்தான் தலைவராக இருப்பார். இதுதான் அந்த தேர்தல்முறை. மிக நேர்மையாக நடந்த தேர்தல் இது. இதனால் ஒரு தகராறும் வராது. இதை பற்றிதான் கமல் நேற்று பேசினார்.
தன்னாட்சி அதிகாரம்
கிராம பஞ்சாயத்துக்களின் முக்கியத்துவம் என்றால் என்பதை புரிய வைத்தார். ஒவ்வொரு பிரச்சனைக்கும் நாம் மத்திய அரசையே எதிர்நோக்கி கொண்டிருக்காமல், கிராம சபைகள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றார். கிராம சபைகளே தன்னாட்சி அதிகாரத்துடன் பல காரியங்களை அதிசயத்தக்க வகையில் செய்ய முடியும் என்றார். ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபை நடத்தப்படும் என்று கமல் தெரிவித்தார். அத்துடன், இந்த கிராம சபை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பிக்பாஸ் வீட்டில் விளையாட்டு ஒன்றினையும் நாம் நடத்த வேண்டும் என்று போட்டியாளர்களை கேட்டுக் கொண்டது அருமை. ஒவ்வொரு போட்டியாளர்களின் ஊர் பெயர்களை கேட்டு, அவைகளில் பெரும்பாலும் கிராமங்களின் பின்னணியை கொண்டதுதான் என்று அவர்களுக்கே அதன் பெருமையை கூறியது அதைவிட எக்ஸ்ட்ரா சிறப்பு.
சபாஷ் கமலுக்கு மட்டும்தான்
ஒட்டுமொத்தத்தில் கமலின் இந்த வார பிக்பாஸ் அறிவார்த்தம் நிறைந்த உபயோகமான நிகழ்ச்சியாக இருந்ததுதான் என்றுதான் சொல்ல வேண்டும். கமலுக்கு சபாஷ்!! ஆனால் பிக் பாஸ்-க்கு இல்லை!!