ஒரே ஒரு தொகுதி.. குட்டித் தொகுதி.. இதில் கூட பணப் புழக்கத்தை தடுக்க முடியலைன்னா!!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தடுமாறுகிறது, கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.
இதைக் கூட கட்டுப்படுத்த முடியாதா, முடியலையா, என்ன தேர்தல் ஆணையமோ இது என்று மக்கள் சிரித்து கேலி செய்யும் நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது என்பது வேதனையானது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பக்கம் பல குழப்பமான தவறுகள் தொடருவதும் விந்தையாக உள்ளது.
பணப் பட்டுவாடாவால் தள்ளிவைப்பு
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை முதலில் அறிவித்து விட்டு பின்னர் தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம். இதற்கு தேர்தல் ஆணையம் கூறிய காரணம், பணம் பெருமளவில் விளையாடியது என்பதுதான்.
ஏன் தடை செய்யவில்லை
ஆனால் யாரை இவர்கள் பணம் கொடுத்தார்கள் என்று குற்றம் சாட்டினார்களோ அவர்களை மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிட அனுமதித்தனர். இது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.
அவர்கள் பணம் கொடுக்கத்தானே செய்வார்கள்
யார் பணம் கொடுத்தார்கள் என்று கடந்த தேர்தலில் புகார் கூறப்பட்டனரோ அவர்கள் மீண்டும் போட்டியிடுவதன் மூலம் அதே போலத்தானே மீண்டும் பண விநியோகம் நடக்கும். இது கூடவா தேர்தல் ஆணையத்திற்குத் தெரியாது என்பது சாதாரண ஜனங்களின் கேள்வி.
தேர்தல் அதிகாரியால் குழப்பம்
மேலும் நடிகர் விஷால் வேட்பு மனு பரிசீலனையிலிலும் பெரும் குழப்பம். தேர்தல் அதிகாரியான வேலுச்சாமி செய்த குழப்பத்தால் தேர்தல் ஆணையத்தின் பெயர் மேலும் டேமேஜானது.
மீண்டும் வந்த பிரவீன் நாயர்
இந்தக் குழப்பத்திற்குப் பிறகு தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயரை போட்டனர். இவர்தான் முதலில் தேர்தல் ரத்தானபோதும் தேர்தல் அதிகாரியாக இருந்தவர். தற்போது இவர் பொறுப்புக்கு வந்த நிலையில்தான் அங்கு பெருமளவில் பணப் புழக்கம் நடந்து வரும் சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த இடைத் தேர்தலின்போது காணப்பட்ட அதே சூழல்தான் இப்போதும்.
ஒரு குட்டி தொகுதியில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இப்படித் தத்தளிக்கிறதே தேர்தல் ஆணையம் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.