ஜல்லிக்கட்டு போட்டிக்கான வைப்பு தொகை தேவையில்லை - மதுரை ஆட்சியர் அறிவிப்பு !
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்கான வைப்பு தொகை செலுத்த தேவையில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கை வெளியிட்டது. இதனால், தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கால்நடை வளர்ப்புத் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து போட்டி நடைபெறும் இடத்தில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் சுப்பிரமணியன், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வைப்புத் தொகை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
மேலும், போட்டிகள் நடத்த மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல, ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் எல்.ஈ.டி திரைகள் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒளிபரப்புவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் கிராமத்தினர் வைப்புத் தொகையாக மாவட்ட நிர்வாகத்திடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்ற விதி கடந்த ஆண்டுகளில் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களும் மாடு பிடி வீரர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.