25 பயணிகளோடு கால்வாயில் கவிழ்ந்த மினிபஸ்... குமரி அருகே பரபரப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே 25 பயணிகளோடு மினிபஸ் ஒன்று எதிர்பாராத விதமாக கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. கால்வாயில் குறைவான அளவு தண்ணீ ர் இருந்ததால் காயங்களோடு பயணிகள் உயிர் தப்பினர், பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப் பட்டது.
குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து மணலிக்கரைக்கு இயக்கப்படும் மினிபஸ்கள் வழக்கமாக வழுக்கலம்பாடு வழியாக மணலிக்கரைக்கு செல்லும். ஆனால், தற்போது வழுக்கலம்பாடு சாலையில் பணி நடந்து வருவதால் ஈத்தவிளை, செம்பருத்திவிளை வழியாக மணலிக்கரைக்கு இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவியர் உட்பட 25 பேருடன் நேற்று காலை மணலிக்கரையில் இருந்து தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ் ஒன்று ஈத்தவிளை, படந்தாவிளை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள திருவிதாங்கோடு கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கினர்.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பொதுமக்கள், மினிபஸ்சின் கண்ணாடிகளை உடைத்து அவர்களை மீட்டனர். இந்த விபத்தில் மினிபஸ் டிரைவர் மகேஷ்(30) என்பவரது கால் முறிந்தது. மேரி அல்போன்ஸ்மெட்(40), இஸ்பிரிட்(67) உள்பட பல பயணிகள் காயமடைந்தனர். இதில் மகேஷை தவிர மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பினர்.
கால்வாயில் குறைவான அளவு தண்ணீர் செல்வதாலும், பொதுமக்கள் விரைந்து செயல்பட்டதாலும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே விபத்துக் குறித்து தகவலறிந்த தக்கலை டிஎஸ்பி மோகன்தாஸ், தக்கலை தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயகுமார் தலைமையில் மீட்புக்குழுவினர் சம்பவ இடம் விரைந்து வந்து மினிபஸ்சை மீட்டனர். விபத்து தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.