ஏலச்சீட்டு நடத்தி ஓய்வு பெற்ற தலைமையாசிரியருக்கு நாமம்- தலைமையாசிரியை கைது!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாதந்திர சீட்டு நடத்துவதாகக் கூறி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஒருவரை ஏமாற்றிய தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அருகிலுள்ள கோவிந்தாபுரம் காமராஜ் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் ஜீவா.
இவர், பள்ளிக்கு சென்று ஆசிரியையாக பணியாற்றுவதை காட்டிலும், தனக்குத் தெரிந்த பள்ளி ஆசிரியர்களை எல்லாம் சேர்த்து மாதாந்திர ஏலச்சீட்டு நடத்துவதை வேலையாக வைத்திருந்துள்ளார்.
இவரிடம் மோரனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவரும் மாதாந்திரச் சீட்டு கட்டி வந்துள்ளார்.
கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பே இவர் கட்டிய சீட்டு நிறைவடைந்த நிலையில், தனக்கு சேரவேண்டிய சீட்டுப் பணம் ரூபாய் 9 லட்சம், அத்துடன் அவ்வப்போது கடனாகப் பெற்ற தொகை ரூபாய் 28 லட்சத்தையும் திருப்பித் தரும்படி ஜீவாவிடம் பல முறை கேட்டுள்ளார்.
ஆனால், தலைமை ஆசிரியை ஜீவா ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கட்டிய பணத்தை இதுவரையிலும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
பணத்தை ஏமாற்றி மோசடி செய்யப் பார்க்கிறார் என்பதை உணர்ந்த சுந்தரம் கடந்த சில நாள்களுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.
அவரது உத்தரவின் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தலைமையாசிரியை ஜீவா, சீட்டு நடத்தி மோசடி செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஜீவாவை போலீஸார் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.