திமுக - அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை செய்தியாளர்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயார்: மா.சு சவால்
சென்னை: திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் சென்னை மாநகர மக்களுக்கு செய்யப்பட்ட சாதனைகள் குறித்து செய்தியாளர்களின் முன்னிலையில் விவாதத்திற்குத் தான் தயாராக உள்ளதாக மேயர் துரைசாமிக்கு முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீண்ட பேச்சு...
25-10-2014 அன்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அண்மையில் சென்னையில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பேசமுயன்ற தி.மு.க. மன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை எல்லாம் மன்றத்தை விட்டு, கூண்டோடு வெளியேற்றியுள்ள மேயர் துரைசாமி 2 மணி நேரம் 20 நிமிடம் இடைவிடாமல் பேசினாராம்.
தனக்குத் தானே புகழாரம்...
அவரின் மிக நீண்ட உரையில் மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதும், நான் அப்பொறுப்பு வகித்த சமயத்திலும் மாநகராட்சியின் வளர்ச்சித்திட்டங்களுக்கு நாங்கள் செலவிட்ட தொகையைக் காட்டிலும், இவர் மேயராக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் அதிகமாக செலவிட்டுள்ளதாக தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கிறார்.
கண்ணுக்கெதிரே காட்சிகள்...
தலைவர் கருணாநிதியின் அறிவார்ந்த ஆலோசனைகளை ஏற்று, மு.க.ஸ்டாலினும், நானும் அப்பொறுப்பு வகித்த சமயத்தில் ஆற்றிய பணிகள் மேம்பாலங்களாகவும் - சுரங்கப்பாதைகளாகவும் - அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரையாகவும்- அலுவலக கட்டிடங்களாகவும் - கலையரங்கங்களாகவும் - மகப்பேறு மருத்துவமனைகளாகவும் - ஆரம்ப சுகாதார மையங்களாகவும் - பூங்காக்களாகவும் - விளையாட்டுத் திடல்களாகவும் - தொற்றுநோய் மருத்துவமனையில் 200 படுக்கைகள் மற்றும் ஆய்வரங்கம் உள்ளடக்கிய கட்டிடங்களாகவும் - ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே நிர்வாக வசதிக்காக கட்டப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடமாகவும் - மழைநீர் வடிகால்வாய்களாகவும் - உயர்கோபுர மற்றும் தெருவிளக்குகளாகவும் - அபார கல்வி வளர்ச்சித்திட்டங்களாகவும் - சுகாதாரத்துறையில் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளாகவும் - ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் ஆன பேருந்து நிழற்குடைகளாகவும் - வழிகாட்டும் பலகைகளாகவும் - ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலங்களாகவும் - பல்வேறு சமூகநலத் திட்டங்களாகவும் கண்ணுக்கெதிரே காட்சிகளாய் இருக்கின்றன.
பணி ஆணை....
3 ஆண்டு கால நிர்வாகத்தில் ஏதேனும் ஒன்றை திட்டம் தீட்டி, ஒப்ப மதிப்பீடுகள் தயாரித்து, ஒப்பந்தம் விட்டு, பணி ஆணை யாருக்கேனும் மேயர் சைதை துரைசாமி வழங்கி இருக்கிறாரா?.
மேதாவித்தனம்...
எதை கேட்டாலும் "இன்னும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுக் கொண்டிருப்பதாக" தானே சொல்லிக்கொண்டிருக்கிறார்?. முன்னாள் மேயர்கள் கேம்ப் ஆபிசில் பயன்படுத்திய கார்களுக்கான செலவு, பணியாளர்களுக்கான ஊதியம் என்று கணக்கு சொல்லி மேதாவித்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பண்ணை பங்களா...
மாநகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு மேயர்கள் வசிக்கும் இல்லங்கள் எந்நேரத்திலும் பொதுமக்கள் குறைகளை கேட்டறிவதற்கு வசதியாக "கேம்ப் ஆபிஸ்"கள் இருப்பது, காலம் காலமாய் நடைமுறையில் இருக்கின்ற ஒன்று. ஆனால், சைதாப்பேட்டை, சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலை என்று தனது இல்லத்திற்கான முகவரியை தந்துவிட்டு, கிழக்கு தாம்பரம், ராஜ கீழ்ப்பாக்கத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை பங்களாவில் சொகுசாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
விவாதத்திற்கு தயார்...
இதனால் சென்னை மாநகர மக்கள் அவரை வீட்டில் சந்திப்பது என்பது முடியாத காரியமாகி உள்ளது. 2 லட்சத்து 47 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சுற்றி, மக்கள் பணி ஆற்றியுள்ளதாக மெச்சிக் கொண்டிருக்கிறார். சென்னை மாநகர மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் இவர் ஆற்றியுள்ள பணிகளையும் - மு.க.ஸ்டாலினும், கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நானும், தலைவர் கருணாநிதியின் ஆலோசனைகளை ஏற்று செய்த சாதனைகளோடு, பத்திரிகையாளர் முன்னிலையில் விவாதிக்க தயாராக உள்ளேன்' என இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.