இந்தியாவின் க்ளீன் கோயில்... மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மத்திய அரசு விருது!
இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் பட்டியலில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.
மதுரை : இந்தியாவிலேயே சிறந்த கோயிலுக்கான மத்திய அரசின் விருதை மதுரை மீனாட்சியம்மன் கோயில் தட்டி வந்துள்ளது.
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையான புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இடம்பிடித்திருந்தது. இதன்படி மீனாட்சி அம்மன் கோவிலை தூய்மையான கோயிலாக மேம்படுத்துவதற்காக மதுரை மாநகராட்சியுடன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து ரூ.11.65 கோடி செலவில் தூய்மை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன.
குப்பையில்லா கோயில்
அதன்படி கோயிலைச் சுற்றி நவீன மின்னணு கழிப்பறை, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக இரட்டை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. மேலும் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து அந்த இடத்திலேயே இயற்கை உரம் தயாரித்தல், குப்பைகளை சேகரிக்க வாகன வசதி என மின்னல் வேகத்தில் குப்பையில்லா இடமாக மாற்றும் வகையில் பணியாளர்கள் செயல்படுத்தப்பட்டுள்ளனர்.
நவீன எந்திரங்கள்
குப்பைகளை சாலைகளில் போடுவதை தடுக்க தூய்மை காவலர்கள் மூலம் கண்காணிப்பு 24 மணி நேர துப்புரவு பணி, கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளுக்கு தடை, நவீன மண்கூட்டும் எந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசு விருது
தூய்மைக்கான இடமாக விளங்க அனைத்து நடவடிக்கைகளும் சிரத்தையோடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் இந்தியாவிலேயே சிறந்த கோயிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் இந்தியாவின் தூயமையான கோயில் விருதை மீனாட்சியம்மன் கோயில் பெற்றுள்ளது.
வியாபாரிகள் மகிழ்ச்சி
இந்த விருதை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பெறுகின்றனர். தூய்மைக்கான விருது அறிவிப்பினால் கோயிலைச் சுற்றியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், சாலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தாங்களும் முழு முயற்சியில் பணியாற்றியதாக அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.