கடன் சொல்லி ஓட்டுக்கேட்ட வரலாறு எங்கும் நடந்ததில்ல.. தினகரனை சரமாரியாக வாரிய அமைச்சர் ஜெயக்குமார்!
கடன் சொல்லி ஓட்டுக்கேட்ட வரலாறு எங்கும் நடந்ததில்லை என டிடிவி தினகரன அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக விளாசியுள்ளார்.
சென்னை: கடன் சொல்லி ஓட்டுக்கேட்ட வரலாறு எங்கும் நடந்ததில்லை என டிடிவி தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக விளாசியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் 89 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றியை வாங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
ஹவாலா ஃபார்முலாவை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தினகரன் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என தெரிவித்து வருகின்றன.
ரூ.20 டோக்கனுக்கு 10000
தினகரனின் ஆதரவாளர்கள் 20 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு வெற்றி பெற்ற பின் இதனை ஆதாரமாக காட்டி 10000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என கூறியதாக தகவல்கள் வெளியானது. இதனை ஆர்கே நகர் மக்களும் உறுதி செய்தனர்.
தினகரனை தேடுகின்றனர்
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பத்தாயிரம் ரூபாய் கேட்டு ஆர்கே நகர் மக்கள் டிடிவி தினகரனை தேடிக்கொண்டிருக்கின்றனர் என சாடினார்.
கடன் சொல்லி ஓட்டுக்கேட்ட..
மேலும் கடன் சொல்லி ஓட்டுக்கேட்ட வரலாறு எங்கேயும் நடந்ததில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை வாரினார். மேலும் நடிகர் கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அரசை விமர்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
கமல்ஹாசனுக்கு கண்டனம்
கமல்ஹாசனுக்கு துணிச்சல் இருந்தால் திமுக மற்றும் தினகரனை திட்டட்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பணம் கொடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பணத்தை நம்பியல்ல
மக்களை நம்பியே நாங்கள் இருக்கிறோம் பணத்தை நம்பியல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா மரணமடைந்த நேரம் குறித்த உண்மையை விசாரணை ஆணையம் கண்டறியும் என்றார்.
உண்மைகள் தெரியவரும்
ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகளுக்கு விசாரணை ஆணையம் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் உண்மைகள் தெரியவரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.