நாடாளுமன்றத் தேர்தல்: தமிழகத்தில் 29ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல்
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிட விரும்புவோர் மார்ச் 29ம் தேதி முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். அன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் மார்ச் 29ம் தேதி தொடங்கும். தாக்கலுக்கான கடைசி நாள் ஏப்ரல் 5-ந் தேதியாகும். ஒவ்வொரு நாளும் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
ஞாயிற்றுக்கிழமை (30-ந் தேதி) விடுமுறை நாளாகும். அதுபோல் 31-ந் தேதி தெலுங்கு புத்தாண்டு தினமும் விடுமுறை தினமாகும். எனவே அந்த இரண்டு விடுமுறை நாட்களிலும் வேட்புமனுக்கள் பெறப்படாது.
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும்போது, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் ஊர்வலமாகவோ, கார்கள் புடைசூழவோ வரக்கூடாது.
100 மீட்டர் தூரத்துக்குள் வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன், அவரை முன்மொழிபவர் உட்பட 4 பேர் மட்டுமே செல்லலாம். 5-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வேட்புமனு தாக்கல் செய்த தேதியில் இருந்து தேர்தல் பிரசாரத்துக்காக அந்த வேட்பாளர் செய்யும் செலவுகள் அனைத்தும் அவரது செலவு கணக்கில் சேர்க்கப்படும். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின் போது முறையே ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு இதில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை கொடுப்பவர்களை நேரில் வரும்படி அழைத்து துன்புறுத்தக்கூடாது. அப்படிப்பட்ட புகார்தாரர்களை தேர்தல் கமிஷனுக்கு உதவி செய்பவராகவே கருதவேண்டுமே தவிர, தொந்தரவு செய்யக்கூடாது.
அப்படி அலுவலர் யாராவது தொந்தரவு செய்தால், தலைமை தேர்தல் அதிகாரியின் 1950 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு புகார் செய்யலாம். தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு கேபிள் டி.வி. சேனல் ஒன்றில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்கிறோம். அதில் இடம்பெற்றுள்ள முதல்வரின் படம் நீக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.