சசிகலா எம்பி மீது குவியும் புகார்கள்... சாதியைச் சொல்லித் திட்டியதாக கொத்தனார் புகார்!
நெல்லை: சசிகலா எம்.பி. மீது சரமாரியாக புகார்கள் குவிந்து வருகின்றன. சாதிப் பெயரைச் சொல்லி அவர் திட்டியதாக புதிய புகார் ஒன்று போலீஸ் டிஎஸ்பியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாசரேத் அடுத்த வெள்ளமடம் நொச்சிக்குளத்தை சேர்ந்தவர் காசி ஈஸ்வரன் (36). இவர், நேற்று இரவு சாத்தான்குளம் டிஎஸ்பி கண்ணனிடம் ஒரு புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில் காசி ஈஸ்வரன், சசிகலா புஷ்பா தன்னை சாதிப் பெயர் சொல்லித் திட்டியதாக கூறியுள்ளார். அந்தப் புகார் விவரம்:
கொத்தனார் வேலைக்கு என்னைத்தான் கூப்பிடுவார்
சசிகலா புஷ்பா எம்பி கட்டுமானம் சம்பந்தமான எந்த வேலை என்றாலும் கொத்தனரான என்னை அழைப்பார். சென்னை ஜமீன் பல்லாவரத்தில் உள்ள சசிகலா புஷ்பா அண்ணன் சதீசுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளேன். திருச்சி புலிவலம் அருகே உள்ள எம்பிக்கு சொந்தமான கம்பெனியில் கட்டிடம் கட்டி கொடுத்துள்ளேன்.
பண்ணை வீட்டில் வைத்து
கடந்தாண்டு நவம்பர் மாதம் அடையல் முதலூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு என்னை வரச் சொன்னார். என்னுடன் எனது தம்பி ராமலிங்கமும் வந்தார். அங்கு எம்பி, அவரது தந்தை தியாகராஜன் இருந்தனர். அப்போது சசிகலா புஷ்பா, நாலுமாவடி அய்யா கோயிலுக்கு என் சொந்த செலவில் மண்டபம் கட்டி கொடுக்க உள்ளேன். லேபர் கான்ட்ராக்ட் ஆகத்தான் வேலை தர முடியும். எனவே எவ்வளவு வேண்டும் என்றார்.
ரூ. 20,000 அட்வான்ஸ்
நான் ரூ.3 லட்சம் கேட்டேன். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம் குறைத்து ரூ.2.50 லட்சம் வாங்கிக் கொள்ள சொன்னார். அட்வான்சாக ரூ.20,000 தந்தார். மீதி பணத்தை வேலை முடிந்த பின் தருவதாக கூறினார். மண்டப வேலையை 3 மாதத்தில் முடித்து தர கூறினார். நானும் 3 மாதத்தில் மண்டப பணிகளை முடித்து கொடுத்து விட்டேன்.
ஆட்டோவை எடுத்துக் கொண்ட தியாகராஜன்
கட்டுமான வேலைக்காக ஆட்டோ வைத்துள்ளேன். அதை தனது பண்ணை வீட்டு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டார் தியாகராஜன். வாடகை தருவதாக கூறினார். ஆனால் தரவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடி மடத்தூர் ரோட்டில் உள்ள சசிகலா புஷ்பா எம்பி வீட்டுக்கு சென்று சம்பள பாக்கியை கேட்டேன். அப்போது அவர், அடுத்த வாரம் ஊருக்கு வருவேன். அங்கு வந்து மீதி பணத்தை வாங்கி கொள்ளுமாறு கூறினார்.
மிரட்டினார்.. சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார்
அவர் கூறியதுபோல அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அடையல் முதலூரில் உள்ள சசிகலா புஷ்பா பண்ணை வீட்டுக்கு நான் சென்றேன். அங்கு இருந்த சசிகலா புஷ்பாவிடம் சம்பள பணம் கேட்டேன். ஆட்டோ வாடகை பாக்கியையும் வாங்கி தருமாறு கேட்டேன். அப்போது சசிகலா புஷ்பா டென்சனாகி இந்த இடத்தை விட்டு போயிருங்க, உனக்கு இனி எந்த சம்பள பாக்கியும் தர முடியாது என்று கூறி சாதி பெயரை சொல்லி திட்டினார்.
நடவடிக்கை எடுங்க
எனவே எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை தராமலும், மினிடெம்போவை அபகரித்து சாதியை சொல்லி திட்டி மிரட்டிய அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் காசி ஈஸ்வரன். ஏற்கனவே சசிகலா புஷ்பா மீது பண மோசடி வழக்கும், அவரது கணவர் மகன் மீது பாலியல் புகாரும் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.