கதிராமங்கலம் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் தொடர்ந்து செயல்படுவோம், வெளியேற மாட்டோம்.. ஓஎன்ஜிசி அதிரடி
காவிரிப்படுகையில் எண்ணெய் கிணறு அமைக்க உள்ள இடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை என்று ஓஎன்ஜிசி மேலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
கும்பகோணம் : காவிரிப் படுகையில் 110 எண்ணெய் கிணறு அமைக்கும் இடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை என்று ஓஎன்ஜிசி மேலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கதிராமங்கலம், நெடுவாசல் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி மேலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் எண்ணெய் கிணறுகள் அமைப்பது குறித்து விளக்கமளித்தார், அப்போது அவர் கூறியதாவது :
நெடுவாசல் போராட்டக்காரர்களுடன் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நெடுவாசல் மக்களுக்கு ஓஎன்ஜிசி தரப்பில் எப்படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் அறிவியல் ரீதியில் சரியானது தான் என்று அவர்களுக்கு புரிய வைத்துள்ளோம். கதிராமங்கலம் பகுதியில் அப்படி செய்ய முடியவில்லை ஏனெனில் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் உள்ளூர் நிர்வாகம் சில காலம் பொறுத்திருக்கச் சொல்லியுள்ளது. நிச்சயம் மக்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும்.

ஓஎன்ஜிசி விளக்கம்
நெடுவாசல் திட்டம் பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது, அப்போது அவர்களுக்கு விளக்கம் தேவைப்பட்ட சமயத்தில் ஓஎன்ஜிசி விளக்கம் அளித்தது. ஆனால் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தம் ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்திற்கு சென்ற பின்னர் அதில் எந்த கருத்தையும் ஓஎன்ஜிசி சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

எண்ணெய் கசிவு
கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது போன்று எதிர்காலத்தில் எதுவும் நடக்கக் கூடாது என்று மக்கள் போராடுகின்றனர், ஓஎன்ஜிசியும் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இன்றி திட்டத்தை செயல்படுத்தவே நினைக்கிறது. தற்போது தொடர்ந்து கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய்கள் தொடர்ந்து பொறியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவசர எண்கள்
கதிராமங்கலத்தில் எண்ணெய் பைப்லைனில் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் கான்கிரீட் அமைத்து பொருத்தப்படும். அண்மைக்காலமாக எண்ணெய்க்குழாய் கசிவு என்பது மிக குறைந்துள்ளது, அதற்கு கசிவுகளை தடுக்கத் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

110 எண்ணெய் கிணறுகள்
மக்கள் நலன், சுற்றுப்புற சுகாதாரம் மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டே ஓஎன்ஜிசி செயல்படுகிறது. காவிரிப்படுகையில் 110 இடங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்டுவதற்கான திட்டம் முதல் கட்ட பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்கான திட்டம்.

வெளியேற மாட்டோம்
ராஜேந்திரன் தனது பேட்டியின்போது கதிராமங்கலத்தில் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இங்கு மட்டுமல்ல தற்போது நாங்கள் பணியாற்றிக் கொண்டுள்ள எல்லா இடங்களிலும் அது தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications