இங்கிட்டு ஈபிஎஸ்... அங்கிட்டு ஓபிஎஸ் அவசர ஆலோசனை.. மக்களுக்காகவா.. நோ.. தங்களுக்காக!
முதல்வர் ஈபிஎஸ் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த மற்றொரு பக்கம் ஒபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனின் அதிரடி அரசியல் நகர்வுகளை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல ஓ.பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனைக் கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த தினகரன், அணிகளை இணைக்க 60 நாட்கள் காத்திருப்பேன். அதன்பிறகு கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன் என்று தெரிவித்திருந்தார்.
தினகரன் கொடுத்த கெடு முடிய இன்னும் 2 தினங்களே உள்ளது. இந்த சூழ்நிலையில்தான், எதிரும் புதிருமாக இருந்த
தினகரனும், திவாகரனும் சமாதானமாகிவிட்டனர். இதுவும் சசிகலா குடும்பத்தினருக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
வரும் 5ஆம் தேதியிலிருந்து கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாக தினகரன் அறிவித்தார். மேலும் தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த கடிதமும் எழுதியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகம்
இந்தச் சூழ்நிலையில் இன்று மாலை அதிமுக அம்மா அணி அமைச்சர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
தினகரன் பேட்டி
இதனிடையே இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மாநிலம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து கட்சியை வலுப்படுத்தப் போவதாக கூறியுள்ளார். லோக்சபா தேர்தலுக்காக சுற்றுப்பயணம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார். இன்னும் இரண்டு நாட்கள் காத்திருங்கள், மிக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.
தலைமை செயலகத்தில் ஆலோசனை
இதனையடுத்து உடனடியாக தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தினகரன் வருகை
ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனின் கட்சி அலுவலக வருகையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எனவும், இரு அணிகளின் இணைப்புக்கான பேச்சுவார்த்தை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மாலையில் அணிகள் இணைப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
ஓபிஎஸ் ஆலோசனை
அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கிரீன்வேஸ்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தினகரனின் அரசியல் வருகை, அவரது பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
அடுத்தடுத்த பரபரப்பு
அணிகள் இணைப்பு குறித்து அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டாலும் ஓபிஎஸ் உடன் அமைச்சர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனவேதான் அணிகள் இணையும் என்று முதல்வரே உறுதியாக கூறியுள்ளார்.
தினகரனின் அரசியல் நகர்வுகள், இரு அணிகள் இணைப்புக்கான பணிகள் என தமிழக அரசியலில் அடுத்தகட்ட அதிரடிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.