எதிர்பார்த்தது போலவே முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: தமிழக முதல்வர் பதவியை மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்திடமே கொடுக்க ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
இதுதொடர்பாக ஏற்கனவே நேற்றும், தீர்ப்புக்கு முன்பு சென்னையில் வைத்தும் ஜெயலலிதா அவருடன் ஆலோசனை நடத்தி விட்டதாக கூறப்பட்டது. அதற்கேற்ப தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூடித் தேர்வு செய்துள்ளனர்.
ஜெயலலிதா எதையும் திட்டமிட்டு செய்பவர். தீர்ப்பு சாதகமாக வந்தால் என்ன செய்ய வேண்டும், பாதகமாகப் போனால் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் ஏற்கனவே திட்டமிட்டு விட்டதாக கூறப்பட்டது. முன்பு 2001ம் ஆண்டு தான் பதவியில் இருந்து விலகியபோது முதல்வராக நியமித்த ஓ.பன்னீர் செல்வத்தையே மீண்டும் முதல்வராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு அவர் மட்டுமே ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசியாக இருப்பவர் என்பதால் அவரையே மீண்டும் முதல்வராக அமர்த்தியுள்ளார் ஜெயலலிதா. முதல்வர் வேட்பாளர் பெயர்களாக அடிபட்ட நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி, நவநீத கிருஷ்ணன் ஆகியோரை அவர் முழுமையாக நம்பவில்லை. அவர்களுக்கு ஓ.பி.எஸ் எவ்வளவோ மேல் என்பது ஜெயலலிதாவின் எண்ணம்.
மேலும், ஷீலா பாலகிருஷ்ணனை முதல்வராக்கினால், அவரால் சட்டசபையில் எதிர்க்கட்சிகளை அரசியல்வாதி போல சந்திப்பது சிரமமாக இருக்கும் என்றும் ஜெயலலிதா கருதியுள்ளார். அதை விட முக்கியமாக கேரளாவைச் சேர்ந்தவர் ஷீலா. எனவே கேரளாவைச் சேர்ந்த ஷீலாவை முதல்வர் பதவியில் அமர்த்தினால் அது முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளிடம் தான் சம்பாதித்து வைத்துள்ள மிக நல்ல பெயரை பாதித்து விடலாம் என்ற எண்ணத்தில்தான் அதே முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வத்திடம் மீண்டும் முதல்வர் பதவியை ஜெயலலிதா ஒப்படைத்துள்ளார் என்று தெரிகிறது.