சென்னை புத்தக கண்காட்சியை 'வீழ்த்திய' சுற்றுலா பொருட்காட்சி- மக்கள் கூட்டத்தால் திணறிய தீவுத் திடல்!
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை விட அரசு நடத்தும் சுற்றுலா பொருட்காட்சிதான் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுவும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்ற தீவுத் திடல் திணற திணற மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
சென்னை பெருநகரவாசிகளுக்கு பொங்கல் விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான்.. சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாதவர்கள் விடுமுறையை குதூகலத்துடன் கழிக்க எத்தனை இடங்கள்தான்.. புத்தக விரும்பிகளுக்கு புத்தக கண்காட்சி... பொழுதுபோக்குவதற்கு வண்டலூர் உயிரியல் பூங்கா, மெரினா கடற்கரை இந்த வரிசையில் சுற்றுலா பொருட்காட்சி..
பாடாய் படுத்தும் புத்த கண்காட்சி
இருப்பினும் புத்தக கண்காட்சி நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு சென்று திரும்புவதற்குள் பெரும்பாடுதான்.. அண்ணா சாலையில்தான் நந்தனம் மைதானம் இருந்தாலும் பேருந்தில் பயணிப்பவர்கள் நடை நடையாய் நடந்து தேய்ந்துதான் புத்தக கண்காட்சியை சென்றடைந்து திரும்ப வேண்டும்..
அள்ளிய கூட்டம்
ஆனால் சுற்றுலா பொருட்காட்சி நடைபெறும் தீவுத் திடலை எளிதில் சென்றடைந்துவிடலாம் என்பதால் கூட்டம் "அள்ளுது" என்றே சொல்லலாம்.. அதுவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ..புத்தக கண்காட்சியைவிட சென்னைவாசிகள் அதிகம் குவிந்திருந்தது என்னவோ சுற்றுலா பொருட்காட்சியில்..
அலைமோதிய மக்கள்
அதுவும் குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுக்காக மணிக்கணக்கில் மக்கள் காத்துக் கிடந்து அனுபவித்தார்கள்.. அத்துடன் எந்த பொருள் எடுத்தாலும் ரூ10 என்கிற அண்ணாச்சி கடைகளிலும் திருப்பூர், ஈரோடு துணிக்கடைகளிலும் திரண்ட கூட்டம் மிரள வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்..
அரசு துறை ஸ்டால்கள்
சுற்றுலா பொருட்காட்சியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு துறைகள் அமைத்த ஸ்டால்களும் கூட பொதுமக்களை வெகுவாக கவர்ந்திருந்தன. குறிப்பாக தமிழக காவல்துறையினர் ஸ்டாலில் முன்பகுதியில் நடத்தப்பட்ட 'நாய் சாகசம்' உள்ளிட்டவை காண அப்படி ஒரு கூட்டம்..அதேபோல் மீன்வளத்துறை, அறநிலையத்துறை ஸ்டால்களிலும் நீண்ட கியூ வரிசையில் நின்ற மக்களைப் பார்க்க வேண்டுமே..
மணிக்கணக்கில் காத்துகிடந்த மக்கள்..
குறிப்பாக பொம்மை ரயிலில் பயணிக்க மணிக்கணக்கில் பொறுமையாக சென்னைவாசிகள் காத்திருந்த ஆச்சரியமும் நேற்று காண முடிந்தது... இந்த முறை வெற்றிகரமாக 'சுற்றுலா பொருட்காட்சி திரையரங்கில்' விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை ஏசி தியேட்டர் அமைத்து ஒளிபரப்பவும் செய்தனர். எங்கிருந்துதான் இத்தனை ஜனங்கள் வந்தனரோ என்று 'அலறும்' அளவுக்கு தீவுத் திடல் திணறியது என்பது மிகையல்ல..