மதுரை: சூப்பர் மார்க்கெட்டில் கைப்பற்றப்பட்ட ‘பைப்’ வெடிகுண்டு செயலிழக்க வைப்பு
மதுரை: மதுரையில் பிரபல சூப்பர்மார்க்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 3.75 கிலோ எடை கொண்ட பைப் வெடிகுண்டை கைப்பற்றிய போலீஸார், அதனைச் செயலிழக்க வைத்தனர். இதனால் அக்கு நிகழவிருந்த மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே, உத்தங்குடியில் இயக்கி வரும் பிரபல சூப்பர் மார்க்கெட்டின் பின்பகுதியில் நேற்று மாலை பாதுகாவலர்கள் சுற்றி வந்தபோது இரும்பு பைப்பிலான ஒரு ‘மர்ம' பொருள் இருந்ததைக் கண்டனர். மேலும், அதன் அருகே பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றும் கிடந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பாதுகாவலர்கள் இது குறித்து சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக இது குறித்து ஒத்தக்கடை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு கிடந்தது பைப் வெடிகுண்டு என்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து அந்த பைப் வெடிகுண்டை வெடிகுண்டு நிபுணர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்கள். அதனை செயலிழக்க செய்வதற்காக ஒத்தக்கடை அருகே புதுதாமரைப்பட்டியில் உள்ள ஒரு மூடப்பட்ட தனியார் கிரானைட் குவாரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தகுந்த பாதுகாப்புடன் அந்த குண்டு வைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டு சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பயங்கர சேதத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தது என்பதால் ஆழமான பகுதியில் வைத்து அந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் பைப் வெடிகுண்டு குறித்து ஆய்வு செய்ய சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இன்று காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்த அவர்கள் புதுதாமரைப்பட்டிக்கு சென்று அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சுமார் 11.45 மணியளவில் ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் அந்த பைப் வெடிகுண்டை நிபுணர்கள் செயல் இழக்க வைத்தனர்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி கூறுகையில், ‘எதற்காக இந்த குண்டு வைக்கப்பட்டது. அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்' என்றார்.
இந்த பைப் வெடிகுண்டு சுமார் 3.75 கிலோ எடையுடன் 1.5 அடி நீளத்திலும், அதில் அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துப் பொருள்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இது அண்மையில் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராணயசாமி வீடு அருகே கண்டறியப்பட்ட அதே வடிவில் இந்த வெடிகுண்டு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக மதுரைக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்து வரும் வேளையில், இத்தகைய பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னர், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி வந்தபோது திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதுதவிர மதுரை மாட்டுத்தாவணி டாஸ்மாக் கடை, அண்ணா நகர் ராமர் கோவில், புதூர் பஸ் டெப்போ, நெல்பேட்டை ஆகிய இடங்களிலும் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.