பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி 24ம் தேதி தொடக்கம்
சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 24 ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு கடந்த 3 ஆம் தேதி தமிழ் முதல் நாள் தேர்வுடன் தொடங்கியது. சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி வருகிறார்கள். தமிழ் , ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பல முக்கிய தேர்வுகள் முடிவடைந்து விட்டன.
இதில் கணித தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள் மட்டும் கடினமாக இருந்ததாக கூறப்பட்டது. ஒரு வினா தவறாக கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் வருகிற 25 ஆம் தேதி முடிவடைகிறது.
விடைத்தாள்கள் கட்டுக் கட்டாக கட்டி பார்சல் செய்யப்பட்டு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு போலீஸ் காவலுடன் பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வருடம் இந்த விடைத்தாள்களை எடுத்து செல்லும் பணி தபால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்போது பல விடைத்தாள் கட்டுக்கள் தண்டவாளத்தில் கிடந்ததால் இந்த வருடம் தபால் துறைக்கு அந்த பணி கொடுக்கப்படவில்லை. மாறாக ஆசிரியர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆங்காங்கே தேர்வு மையங்களுக்கு சென்று விடைத்தாள் கட்டுக்களை சேகரித்து இவர்களுக்கு என்று நியமிக்கப்பட்ட வாடகைக்கார்களில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்துவதற்கு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 66 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விடைத்தாள் திருத்துவதற்கு ஆசிரியர்கள் அவற்றை கண்காணிப்பதற்கான அதிகாரிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வருகிற 24 ஆம் தேதி முதல் அனைத்து மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. விடைத்தாள்களை 10 நாட்களுக்குள் திருத்தி முடிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்த வித தவறும் இருக்க கூடாது என்றும் அதே நேரத்தில் சரியான முறையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டும் ஒருமுறைக்கு இருமுறை சரியாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஆசிரியர்கள் கவனமாக பார்க்க வேண்டும். மேலும் அதை கண்காணிப்பவர்களும் சரியான முறையில் கண்காணிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த வருடத்தை விட முன் கூட்டியே வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.