பேருந்தில் ரகளை செய்யும் மாணவர்களை வீடியோ எடுக்கும் போலீஸ்
சென்னை: மாநகரப் பேருந்தில் ரகளை, அடிதடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை வீடியோ எடுத்து அவை பெற்றோரிடம் காண்பிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மாணவர்களிடையே ஏற்படும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்தில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களைக் காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
மாணவர்களின் அடி-தடி மோதல் காட்சிகள் சென்னையில் அன்றாட காட்சிகளாக அரங்கேறுகிறது. எனவே மாணவர்களின் கொட்டத்தை அடக்க காவல்துறையினர் புதுமையான அணுகுமுறையை கையாள தொடங்கிவிட்டனர்.
பேருந்தில் அவர்கள் செய்யும் ரகளை காட்சிகளையும், அடி-தடி மோதலில் ஈடுபடும் காட்சியையும் வீடியோ படம் எடுத்து, அந்த வீடியோ படக்காட்சிகளை கல்லூரி முதல்வருக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் போட்டு காட்டி, உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வீடியோ காட்சிகளை காட்டவும் முடிவு செய்துள்ளனர்.
நேற்று மாலை 3 மணி அளவில், அண்ணாசதுக்கத்தில் இருந்து ஆவடி சென்ற மாநகர பேருந்திலும், பெரம்பூர் சென்ற மாநகர பேருந்திலும் புதுப்பேட்டை நிறுத்தத்தில் ஏராளமான மாணவர்கள் ஏறினார்கள். அந்த மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளிலும், பக்கவாட்டு இரும்பு கம்பிகளிலும் தொங்கியபடி வந்தனர். அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் போதையில் இருந்தனர்.
பாட்டுப்பாடியும், விசில்அடித்தும் ரகளை செய்தனர். அதோடு மட்டுமல்லாது பேருந்தில் ஓரமாக அமர்ந்து இருந்த பெண் பயணிகளை அவர்கள், கடுமையாக கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் பேருந்தின் பக்கவாட்டு இரும்பு கம்பிகளை உடைத்தனர். இதனால் பேருந்து நடத்துனர் தீனதயாளன், செல்போனில் போலீசாருக்கு பேசி புகார் கூறினார். மாணவர்கள் ரகளை செய்த பேருந்துகள், எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தபோது, அங்கு தயார் நிலையில் நின்ற காவல்துறையினர், ரகளை செய்த மாணவர்களை மடக்கிப்பிடித்தனர். இதில் 50 மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர்.
அவர்களை வரிசையாக நிற்க வைத்து வீடியோ படம் எடுத்தனர். பின்னர் மாணவர்களின் பெயர், பெற்றோர், வீட்டு முகவரி, படிக்கும் கல்லூரி விவரங்களை போலீஸ் ரெக்கார்டில் பதிவு செய்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். வீடியோ காட்சிகள், மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்கள் படிக்கும் கல்லூரி முதல்வர்களுக்கும் போட்டு காண்பிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.