வேலூர் பெல் வணிக வளாகத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு?: இல்லை என்கிறது போலீஸ்
வேலூர்: வேலூரில் உள்ள பெல் நிறுவன வணிக வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் பெல் நிறுவன வணிக வளாகம் ஒன்று உள்ளது. பள்ளிகள், ரயில் நிலையம் அருகே உள்ள இந்த வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று காலை பணிக்கு வந்தனர். அப்போது அவர்கள் வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து செல்போன் பொருத்தப்பட்ட அந்த வெடிகுண்டை வணிக வளாகத்தில் இருந்து அகற்றினர். வெடிகுண்டை அருகில் உள்ள மைதானத்திற்கு எடுத்துச் சென்று அதை செயல் இழக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
இதற்கிடையே 300 மீட்டர் அளவுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த 1ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்த நிலையில் இன்று வேலூர் வணிக வளாகத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியதால் மக்கள் பீதிக்கு உள்ளாயினர்.
வெடிகுண்டு இல்லை
வெடிகுண்டு என்று கூறப்பட்ட பொருளை ஆய்வு செய்தபோது அதில் செல்போனில் வெடிதுகள்கள் மட்டும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் கூறுகையில்,
பெல் நிறுவன வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது வெடிகுண்டு அல்ல. அதில் வெடிபொருள் தயாரிக்கப் பயன்படும் வெடிதுகள்கள் மட்டுமே இருந்தது. யாரோ வெடிதுகள்களை செல்போனில் சுற்றி வைத்துள்ளனர். அவ்வாறு வெடிதுகள்களை வைத்தது யார் என்று விசாரித்து வருகிறோம் என்றார்.