நாமக்கல்லில் ஒரு முட்டை ரூ.5.16 ஆக உயர்வு - இனி வீட்ல ஆம்லேட் கேட்டா அடிதான்...
நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 42 காசுகள் அதிகரித்து கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மேலும் 42 காசுகள் உயர்த்தப்பட்டது. ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 16 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டை தேவை அதிகரிப்பு
குளிர்காலம் தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் முட்டையின் தேவையும் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் முட்டை விலை ஏறுமுகமாகவே உள்ளது.
முட்டை விலை உயர்வு
தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
வரலாறு காணாத உயர்வு
முட்டை கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது சில்லறை விலையில் ஒரு முட்டை 5 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் விலை 42 காசுகள் உயர்ந்துள்ளதால் சில்லறை விலை முட்டை மேலும் அதிகரிக்கும்.
நுகர்வோர் பாதிப்பு
கார்த்திகை மாதம் நாளை பிறக்க உள்ளது. இதனால் மாலை அணிபவர்கள் அசைவத்தை தவிர்த்து விடுவார்கள். இதனால் முட்டை விலை குறையுமா என்று கேட்டால், குறைய வாய்ப்பே இல்லை என்கின்றனர். முட்டை விலை அதிகரித்து வருவதால் நுகர்வோர்கள் பாதிப்படைந்துள்ளனர்.