25 தமிழக ரயில் நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு- எந்தெந்த கட்டணங்கள் உயருமோ?
25 ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் எந்தெந்த கட்டணங்கள் எப்படியெல்லாம் உயருமோ என அச்சத்தில் உள்ளனர் பயணிகள்.
சென்னை: 25 தமிழக ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் எந்தெந்த கட்டணங்கள் உயருமோ என்பது பயணிகள் அச்சம்.
தமிழகத்தில் உள்ள எழும்பூர், திருச்சி, சேலம், மதுரை உட்பட 25 ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
நாடு முழுவதும் அதிக வருவாய் ஈட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. இதனை முன்னிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 350 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சகல வசதிகளுடன் ஷாப்பிங் மால்
தனியார் ஷாப்பிங் மாலில் உள்ளது போல் பார்க்கிங் உட்பட சகல வசதிகளும் இருக்கும் என்றும் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வசம் ஒப்படைக்கப்படும் சென்ட்ரல் ரயில் நிலையம் 45 ஆண்டுகள் அவர்களிடம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கக்கூட்டங்கள்
இந்நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்க டாடா, டிவிஎச், எஸ்பிஐ காபஸ் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களான நிப்பான் கோயல், எஸ் பேங்க் உட்பட 17 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன. அந்த நிறுவனங்களை அழைத்து மறுமேம்பாட்டு திட்ட நோக்கம் குறித்தும் சென்ட்ரலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கட்டணங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒப்பந்தத்திற்கு முந்தைய விளக்கக்கூட்டங்களை 2 முறை தெற்கு ரயில்வே நடத்தியது.
பார் வைக்க அனுமதி வேண்டும்
பொருட்கள் வைப்பு அறை உள்ளிட்ட அனைத்து கட்டண சேவைகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன பெருநிறுவனங்கள். இதை விட முக்கியமான கோரிக்கை சென்ட்ரல் வளாகத்தில் பார் வைக்க அனுமதி தர வேண்டும் என்பதுதான்.
ரயில்வே நிர்வாகம் ஒப்புதல்
அதுமட்டுமல்ல மெட்ரோ ரயில், சென்ட்ரல் வளாகத்தில் தரைக்கு கீழே 3 தளங்களில் அமைக்கும் வாகன நிறுத்தமிடமும் தங்களிடம் தர வலியுறுத்தியுள்ளனர். இப்படி பெருநிறுவனங்கள் கேட்கும் பெரும்பான்மையான கோரிக்கைகளை ஏற்க தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வாரம் அறிவிப்பு
ஷாப்பிங் மால் அமைக்கும் இடத்திற்கான அளவை அதிகரித்து இந்த மாதம் முதல் வாரத்திற்குள் அறிவிக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது தெற்கு ரயில்வே. இதற்கு பல கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்படுகிறது.
வசூலிக்க ஒரே வழி
இந்த செலவு மொத்தத்தையும் பார்க்கிங் கட்டணம், நடைபாதை கட்டணம், விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை, டிக்கெட் கட்டணம் உள்ளிட்டவற்றைக் கொண்டே பெரு நிறுவனங்கள் வசூல் செய்யும். மேலுலும் ரயில்வே நிலையம் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கான செலவுகளையும், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் இருந்து வசூலிப்பது மட்டுமே ஒரே வழி.
அஞ்சும் பயணிகள்
இதனால் பீதியடைந்துள்ள ரயில் பயணிகள் வரும் காலங்களில் ரயிலில் பயணிப்பது, விமமானங்களில் ஆகும் செலவுக்கு ஈடாகி விடுமோ என அஞ்சுகின்றனர். தனியாரிடம் ரயில் நிலையங்கள் தாரை வார்க்கப்பட்டால் விமான பயணத்தை போன்றே இதுவும் எட்டாக்கனியாகிவிடுமோ என்றும் பயணிகள் கருதுகின்றனர்.
பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது
தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் கட்டண உயர்வு இருக்காது என மத்திய அரசு மற்றும் தெற்கு ரயில் உறுதியளிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே நிலையங்களை யாரிடம் கொடுத்து எப்படி மேம்படுத்தினாலும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பு..