தமிழகத்தில் எப்போது மழை பெய்யும் ? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது மட்டும் லேசாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 31ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து 310 கி.மீ மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 280 கி.மீ தொலைவில் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பகுதி மேகமூட்டமாக காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 280 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து தென்மேற்கில் 310 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. அது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி நாளை மாலை வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு மழைக்காலம்
காற்றழுத்தம் விலகிச் சென்றதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் வெயில் கொளுத்துகிறது. இந்த வெப்பமானது மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், 11ம்தேதிக்குப் பின்பு தான் மழை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தன்னார்வ வானிலை இணையதளமான 'சென்னையில் ஒரு மழைக்காலம்' தெரிவித்துள்ளது. வருகிற 25ம் தேதிக்கும், டிசம்பர் 10ம் தேதிக்கும் இடையே மழை தீவிரமாக இருக்கும் என்றும் அந்த இணைய தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.