கடையத்தில் சிக்கிய 15 அடி நீள ராஜநாகம்.. மக்கள் பீதி
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையம் அருகே மக்கள் குடியிருக்கும் பகுதியில் 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் பிடிபட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கருததபி்ள்ளையூரில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் பிரான்சிஸ். அங்குள்ள மலையடிவார பகுதியில் இருக்கும் பீட்டர் என்பவரது தோட்டத்தில் ஒரு ராஜநாகம் ஊர்ந்து செல்வதை பார்த்தார்.

அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மாலை கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் காஞ்சனா உத்தரவின் பேரில் வனச்சரகர் இளங்கோ தலைமையில் வனவர் மோகன், வனக்காப்பாளர் ரத்தினவேல் செல்லப்பாண்டியன், வேட்டைதடுப்பு காவல்ர்கள் ரமேஷ்பாபு, வேல்ராஜ், பசுங்கிளி, சக்தி முருகன் ஆகியோர் அந்த தோட்டத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள புதரில் பதுங்கி கிடந்த 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை 2 மணி நேரம் போராடி பிடித்தனர். பிடிப்பட்டது பெண் ராஜநாகம் என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பொதுவாக ராஜநாகம் குளிர்ச்சியான அடந்த வனப்பகுதியில்தான் வசிக்கும். இதன் காரணமாகவே மிருக காட்சி சாலையில் இதனை குளிர்ச்சியான வசதி கொண்ட பெட்டியில் வைத்து பராமரிப்பர். கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருப்பது போலவே மலை அடிவார பகுதியும் இருப்பதால் ராஜநாகம் இங்கு வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications