பொட்டு சுரேஷை போட்டுத்தள்ள சென்னையில் திட்டமிட்ட அட்டாக் பாண்டி
மதுரை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷை கொலை செய்ய சென்னையில் திட்டம் தீட்டப்பட்டதாக சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டாக் பாண்டியை தவிர, மற்றவர்கள் மதுரைக்கு வந்து கொலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆள்கள் ஏற்பாடு, வாகன ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்றும் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, மாவட்ட வேளாண் விற்பனைக் குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி உள்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 27ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி மன்மதபாண்டியன் மதுரை நீதித் துறை நடுவர் நீதிமன்ற நடுவர் (பொறுப்பு) எஸ்.என். தனஞ்செயன் முன் குற்றப் பத்திரிகையை வியாழக்கிழமையன்று சமர்ப்பித்தார். சுமார் 1050 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப் பத்திரிகையில், 117 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 110-க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் விவரம்
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முதல் நபராக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, அட்டாக் பாண்டியின் உறவினர்களான விஜயபாண்டி, பிரபு, அட்டாக் பாண்டியின் கார் ஓட்டுநர் சிற்பி சரவணன், சபாரத்தினம், சந்தானம், பிரவீண் என்ற சகாய பிரபு, ஆரோக்கிய பிரபு, வில்வதுரை, முத்துப்பாண்டி, பாண்டியராஜன், பிரேம், ஜோதி, ராஜா, லிங்கம், செந்தில், சேகர், கார்த்தி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அழகிரியின் அபிமானிகள்
குற்றப் பத்திரிகையின் சாராம்சம் கூறியுள்ள சிபிசிஐடி போலீசார், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் அபிமானத்தைப் பெறுவதில் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி இடையே 2009 முதல் மோதல் இருந்து வந்துள்ளது. இதனால், அட்டாக் பாண்டிக்கு தொழில் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
உச்சக்கட்ட மோதல்
பொட்டு சுரேசுக்கும் அட்டாக் பாண்டிக்கும் இடையே 2012ம் ஆண்டு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால், பொட்டு சுரேஷை கொலை செய்வது என 2012ம் ஆண்டு இறுதியில் அட்டாக் பாண்டி திட்டமிட்டு வந்துள்ளார். ஆனால் அதனை செயல்படுத்த சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
சென்னையில் திட்டமிட்ட அட்டாக்
2013ஆம் ஆண்டு ஜனவரியில் அட்டாக் பாண்டி சென்னை சென்றுவிட்டார். அங்கு, தனது உறவினர்களான விஜயபாண்டி, பிரபு, வில்வதுரை உள்ளிட்டோரை சென்னைக்கு வரவழைத்து, பொட்டு சுரேஷை கொலை செய்வது குறித்து ஆலோசித்துள்ளார். அதன்படி, அங்கேயே திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அட்டாக் பாண்டியின் உறவினர்கள்
அட்டாக் பாண்டியை தவிர, மற்றவர்கள் மதுரைக்கு வந்து கொலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆள்கள் ஏற்பாடு, வாகன ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதையடுத்து, பொட்டு சுரேஷை அவரது அலுவலகம் செல்லும் வழி அல்லது அவரது வீட்டுக்கு அருகில் கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்கெட் போட்டு கொலை
பொட்டு சுரேஷை 5 பேர் கொண்ட குழு ஒரு வாரமாகக் கண்காணித்து அவரை பின் தொடர்ந்தனர். பொட்டு சுரேஷ் வீட்டருகே இரண்டு வாகனங்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சரியான நேரத்திற்காக தயார் நிலையில் இருந்துள்ளனர்.
சம்பவம் செய்யப்பட்ட ஜனவரி 31
இந்த நிலையில், ஜனவரி 31ம் தேதி இரவு 8 மணியளவில் பொட்டு சுரேஷ் அவரது வீட்டின் அருகே காரில் வந்தபோது, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அவரைக் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
ஸ்டாலினை சந்தித்த அட்டாக் பாண்டி
அழகரியின் ஆதரவாளராக இருந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் கொலைக்கு சில நாள்களுக்கு முன்பு, சென்னையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவரது அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். பொட்டு சுரேஷ் கொலைச் சம்பவத்தில், திமுக முக்கியப் பிரமுகர்களின் பெயரும் அடிப்பட்டது ஆனால் குற்றப்பத்திரிக்கையில் அழகிரியின் பெயரோ, ஸ்டாலினின் பெயரோ இருப்பதாக தெரியவில்லை என்கிறது சிபிசிஐடி வட்டார தகவல்.
குண்டர் சட்டத்தில் கைதான பிரவீண்
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரவீன் என்ற சகாய பிரவீன் மீது மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியின் நண்பரை கொல்ல முயன்ற வழக்குகள் உள்ளன இவன் மீது இப்போது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
அதேபோன்று மதுரை அண்ணாநகர் அன்பு நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் அருண்பாண்டியனையும் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ரிலாக்ஸ் ஆன அழகிரி
அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்குள், பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் எங்கே தன்னுடைய பெயரோ தன் மகன் பெயரோ இணைக்கப்பட்டு விடுமோ என்று பதற்றத்தில் இருந்த அழகிரி தற்போது ரிலாக்ஸ் ஆகி இருப்பதாக தெரிகிறது. அதேபோல மு.க.ஸ்டாலின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இல்லை என்றும் சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.