சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை - நெற்கதிர்களுக்கு மக்கள் வரவேற்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்கு அச்சன் கோவிலில் இருந்து நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டன.
செங்கோட்டை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக அச்சன் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்களுக்கு மக்கள் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் வேண்டி நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து சாமிக்கு படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும். பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. பிரசாத நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நிறைபுத்தரிசி பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை 30ஆம் தேதி நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது. இதற்காக இன்று 29ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு, மாலை 5மணிக்கு மேல்சாந்தி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றினார். வேறு பூஜைகள் எதுவும் இல்லாமல் நடை இரவு 10 மணிக்கு சாத்தப்படும்.
நெற்கதிர்கள் பிரசாதம்
நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனமும், அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து மேல்சாந்தி நெற்கதிர்களை தலையில் சுமந்து, கோயிலை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு செல்வார். தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அச்சன்கோவில் ஐயப்பன் நிலம்
இந்த நெற்கதிர்கள் கொல்லம் மாவட்டம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து இன்று காலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிராயார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தேவசம்போர்டு அதிகாரிகள்,ஆலய மேல்சாந்திகள் ஆகியோர் நெற்கதிர்களை அறுவடை செய்தனர்.
சபரிமலை பயணம்
நெல்லைமாவட்டம் செங்கோட்டை வழியாக கோட்டைவாசல் கருப்பாசாமி கோவிலில் பூஜைகள் செய்து பின்னர் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலிலும் பூஜைகள் செய்து சபரிமலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.