பானை மீது நடனம் ஆடி...கின்னஸ் சாதனை புரிந்த 483 சேலம் மாணவிகள்!
சேலம்: சேலத்தில் தமிழர்கள் கலாச்சாரத்தினைப் போற்றும் வகையில் பள்ளி மாணவிகள் இணைந்து பானை மீது நடனமாடி பார்ப்பவர்களை மகிழ்வித்தனர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சேலம் குளூனி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 55 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டும், இந்தியர்களின் கலாச்சாரத்தினையும் தமிழ்நாட்டின் பண்பாட்டினை பறைசாற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் இன்று பள்ளி வளாகத்தில் பானையின் மீது நின்று இறைவணக்க பாடல், பாரதியாரின் பாரத சமுதாயம் வாழ்கவே பாடல் ஆகிய பாடல்களுக்கு 6.4 நிமிடங்கள், 483 மாணவிகள் குழுவினராக இணைந்து பரதநாட்டியம் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைத்தனர்.
இந்த கின்னஸ் சாதனைக்காக கடந்த 3 மாதங்களாக மாணவிகள் அனைவரும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த கின்னஸ் சாதனை படைத்த அனைத்து மாணவிகளும் 2 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவிகள் ஆவர். 483 மாணவிகளால் படைக்கப்பட்ட உலகிலேயே மிக அதிகமான நபர்கள் ஒரே சமயத்தில் பானை மீது நடனம் ஆடிய நிகழ்வு எனும் உலக கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மும்பை இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமியின் மேலாளர் ஜெகநாதன், "இந்த பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 483 மாணவிகள் பானையின் மீது நடனமாடியது உலகிலேயே இதுதான் முதல் முறையாகும். எந்த சாதனையாக இருந்தாலும் 4 நிமிடங்களாகத்தான் இருக்கும். ஆனால் மாணவிகள் பானை மீது நடனமாடிய சாதனை 6.4 நிமிடங்கள் உலக சாதனையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.