தினகரன் நாகரீகமான அரசியல் செய்கிறார்- சசிகலா புஷ்பா திடீர் பாராட்டால் பரபரப்பு!
தினகரன் நாகரீகமான அரசியலை செய்கிறார் என அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா திடீரென பாராட்டுத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: தினகரன் நாகரீகமான அரசியலை செய்கிறார். எல்லா பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டார் என அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா எம்.பி திடீரென பாராட்டியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. அளித்த பேட்டி:
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என முதன்முதலில் சொன்னது நான்தான். அதை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஒபிஎஸ் ஜெயலலிதா மரணம் குறித்து பேச ஆரம்பித்தார். அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை கமிஷன் அமைத்துள்ளார்.
ஆனால், ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் யார் என்பது நீதி விசாரணைக்குப் பிறகு தான் தெரியும். தமிழக மக்கள் ஜெயலலிதாவின் மரணத்தில் ஒரே ஒரு குடும்பத்தின் மீதுதான் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் அனுமானமாக எதையும் சொல்ல முடியாது. தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டுமா? ஆகையால் அதற்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த விசாரணை இருக்க வேண்டும்.
சந்தர்ப்பவாதிகள்
தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு மக்கள் என்ன இடம் கொடுத்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சந்தர்ப்பவாதத்துக்காக யார், யார் எங்கு செல்கிறார்கள் என்பதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள். ஒரு நபர் மீது மரியதை வருகின்றதென்றால் அந்த மரியாதை ஒரே வாரத்தில் போய்விடுகிறது. இதுதான் தமிழக அமைச்சர்களின் இன்றைய நிலை.
மக்களுக்கு யாரையுமே பிடிக்கல
மக்களுக்காக போராடுகிற அரசியல்வாதி யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால் நிச்சயம் யாரும் இல்லை. மக்களுக்கு அதிமுகவில் யாரையுமே பிடிக்கவில்லை என்பதை விட நம்பிக்கை இல்லை.
ஒருமையில் பேசலாமா?
முதல்வரும், துணை முதல்வரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விஷயங்களைப் பேசுகிறார்கள். அதாவது புரட்டி புரட்டி பேசுவதில் வல்லவர்களாக உள்ளார்கள். ஒரு முதல்வரே தன் கட்சியை சார்ந்தவரை பொதுக்கூட்டதிலும் பொது மேடைகளிலும் 'அவன்' 'இவன்' என மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுகிறார். இப்படி தரக்குறைவாக பேசி அரசியல் செய்ய வேண்டுமா?
தினகரனுக்கு பாராட்டு
என்னைப் பொறுத்தவரை தினகரன் நாகரீகமான அரசியலை செய்து வருகிறார். பலவிதமான பிரச்சனைகளும் நெருக்கடிகளும் வந்த போது தினகரன் அதை தைரியமாக எதிர்கொண்டார்; அரசியலில் நாகரீகமாக நடந்துகொள்கிறார் என்ற கருத்து மக்களிடம் உருவாகியுள்ளது. அதிமுக தொண்டர்களும் அதை உணர்கிறார்கள்.
மரியாதை போய்டுச்சு
ஆனால் ஓபிஎஸ் தன் சுயலாபத்துக்காக கட்சியை விட்டு போனார் என்றும், சில லாபங்கள் கிடைத்ததால் கட்சியில் திரும்ப இணைந்துகொண்டார் என்கிற கருத்து மக்களிடம் இருக்கிறது. இவர்கள் எல்லாரும் மாற்றிப் பேசுவதாலும் நடந்துகொள்வதாலும் மக்களிடம் மரியாதை சுத்தமாகக் குறைந்துவிட்டது.
தைரியமான தலைமை
இந்த தலைவர்களால் அதிமுகவின் தொண்டர்களுக்கும் நல்லது நடக்கப் போவதில்லை. மக்களுக்கும் நல்லது நடக்கப் போவதில்லை. ஒரு தைரியமன தலைவரை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது.
இவ்வாறு சசிகலா புஷ்பா எம்.பி கூறினார்.