பள்ளிகளில் செப். 30 வரை மாணவர்களை சேர்க்கலாம் – பள்ளி கள்வித் துறை
நெல்லை: தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை செப் 30ம் தேதி முடிய மாணவர்களை சேர்க்கலாம் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வரும். இதனால் பிளஸ் 1 வகுப்புகள் மட்டும் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்படும்.
இதே போல மாணவர்கள் சேர்க்கையை ஜூலை 31 ஆம் தேதிக்குள் முடித்து கல்வி துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு உத்தரவிட்டது. இதற்காக மாணவர்கள் சேர்க்கையை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், ஆங்கில இந்திய பள்ளி ஆய்வாளர்களுக்கு தமிழக பள்ளி கல்வி துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள உத்தரவில்,
"தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விதிகளின் படி ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் டூ வரை மாணவர்களை சேர்க்க செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரத்தை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.