எஸ்.டி.பி.ஐ கட்சியின் 6 ஆம் ஆண்டு தொடக்கவிழா: தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்!!
சென்னை: எஸ்.டி.பி.ஐ கட்சியின் 6 ஆம் ஆண்டு தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சென்னை தலைமை அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கொடியேற்றினார்.
சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கூடியிருந்த நூற்றுக்கனக்கானோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன், மாநில செயலாளர் அமீர் ஹம்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமை அலுவலகத்தில் கொடியேற்றிவைத்து மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி பேசியதாவது:
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாய், மாற்று அரசியல் சக்தியாய், கடமை கண்ணியம் கட்டுப்பாடுள்ள போராட்ட அரசியல் பேரியக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி வீறுகொண்டு வளர்ந்து வருகிறது. கடந்த 2009 இதே நாளில் எஸ்.டி.பி.ஐ கட்சி துவங்கப்பட்டது. இன்று 20 மாநிலங்களில் செயல்பட்டு வளர்ந்து வருகிறது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்கள் மக்களுக்காக பணியாற்ற அர்ப்பணிக்க தொண்டு செய்ய இன்னும் அதிகமாக தங்களை தயார் செய்து கொள்ளவேண்டும்.
மதவெறி சக்திகளின் வேகம் அதிகரித்து வருகிறது. சிறுபான்மை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தலித் மக்களுக்கு எதிரான பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.
மத்தியில் புதிதாக ஆட்சியை ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களை பெரும் சுமையில் ஆழ்த்தும் விதத்தில் இரயில் பயணம் மற்றும் சரக்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இன்னும் பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே வேகமான மக்கள் தொண்டிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
மக்களுக்காக பணியாற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஊடகங்களும் அனைத்து துறை அறிஞர்களும் அனைத்து சமுதாய மக்களும் ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 6 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கொடியேற்று நிகழ்சிகளும், நூற்றுக்கணக்கான இடங்களில் நலத்திட்ட உதவிகளும்,மருத்துவ முகாம்களையும் நடத்தப்பட்டு வருகின்றன.
பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications