ஜெ. மர்ம மரணம்: ஆறுமுகசாமி கமிஷனில் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர்
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகினார்.
சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
உடல் நல குறைவுகளால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அது பலனளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இவருக்காக எழிலகத்தில் ஒரு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கமிஷன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உள்ளிட்டோரும் ஆணையம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தனர்.
ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்களை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக்கு அழைத்து வருகிறார். அந்த வகையில் அவருடன் நெருக்கமாக இருந்த தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2002 முதல் 2006-ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு செயலாளராக இருந்தவர் ஷீலா. ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றதால் அவர் கடந்த 2013-இல் தலைமை செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அவரது பதவிக் காலம் முடிவடைந்தாலும் அவரை தமிழக அரசு ஆலோசகராக 2 ஆண்டுகளுக்கு பணியமர்த்தினார் ஜெயலலிதா.