இடிந்தகரை சம்பவம்.. 6 பேர் மீது வழக்கு - உதயகுமார் மீது இதுவரை வழக்கு பதிவாகவில்லை
அதேசமயம், போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவல்களைப் போலீஸார் மறுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், கூத்தங்குழி கிராமங்களில் தாது மணல் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக கோஷ்டி மோதல் இருந்து வருகிறது.
இந்த இரு கோஷ்டிகளும் அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர்.
இதில் பயத்தில் உறைந்து போன மக்களில் சிலர் குடும்பங்களுடன் கூத்தங்குழியை விட்டு வெளியேறி உவரி, கூடுதாழை, சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம், பெரியதாழை ஆகிய இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.கூத்தங்குழியை விட்டு வெளியேறிய சிலர் இடிந்தகரை சுனாமி காலனியில் வசித்து வந்தனர்.
இவர்கள் அடிக்கடி கூடி தங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தனர். கடந்த வாரம் இடிந்தகரையில் தங்கி இருப்பவர்கள் வெளியேறுமாறு தண்டோரா போடப்பட்டது. எனினும் சொந்த ஊருக்கு சென்றால் ஆபத்து ஏற்படும் என கருதிய சிலர் சுனாமி காலனியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இடிந்தகரை சுனாமி காலனியில் 26.11.2013 இரவு 7 மணிக்கு நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் அருகில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. வெடி விபத்திலும், கட்டிட இடிபாடுகளிலும் பலர் காயமடைந்தனர். அந்தப் பகுதிகளில் நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதரி, தூத்துக்குடி எஸ்பி துரை தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இடிந்தகரை, கூத்தங்குளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விடிய விடிய வெடிகுண்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டிருக் கும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அவர்கள் வெடிபொருட்களுக்கான ஆயுதங்களை வைத்திருந்தல், தீ வைத்தல், சதி திட்டம் தீட்டுதல், வெடி மருந்து சட்டப்பிரிவு, நாட்டுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுவரை வழக்குப் பதிவாகவில்லை
ஆனால் இதுவரை அவர்கள் மீது வழக்குப் போடப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. மாறாக, வெடிகுண்டுச் சம்பவத்தில் உயிரிழந்த வியாகப்பன், படுகாயம் அடைந்த விஜய், சேசு மரியான், சூசை, வளன், மகிமைராஜா ஆகியோர் மீதுதான் கூடங்குளம் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.