நீட் கெடுபிடி: சிபிஎஸ்இ அலுவலகம் தாக்குதல் - போராடிய மாணவர்கள் கைது # NEET
நீட் தேர்வு கெடுபிடியைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்
சென்னை: நீட் தேர்வின் போது மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடந்தது. தேர்வு எழுதவந்த மாணவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சட்டைகள் வெட்டப்பட்டன. கம்மல்கள், கொலுசுகள் கூட கழற்றப்பட்டன. செருப்பு கூட போடாமல்தான் மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர்.
கேரளாவில் மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த தேர்வு வினாத்தாளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் சங்கத்தினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக வழக்கறிஞர் நசருல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் முறையீடு செய்தார்.
நீட் தேர்வு எழுதவந்த மாணவ மாணவிகளை ஆபரணங்களை அகற்றச் சொல்லியும், முழுக்கைச் சட்டை ஆடைகளை கிழிக்கச் சொல்லியும், சுடிதார் துப்பட்டாவை அகற்றச் சொல்லியும் கண்காணிப்பாளர்கள் அத்துமீறியுள்ளனர்.
இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்பிரச்சினையை நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கூறினார். விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணியம் ஆகியோர் நசருல்லாவின் முறையீடு தொடர்பாக பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்தை இன்று காலையில் மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் போராட்டம் நடைபெற்றது. மாணவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நீட் தேர்வின் போது சோதனை என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டிய மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முற்றுகை போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்த போது, சிபிஎஸ்இ அலுவலகம் மீத மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலீசார் கைது செய்தனர்.