அடிச்சு ஆடிய ஆலங்கட்டி மழை... தமிழக உள்மாவட்ட மக்கள் ஆனந்தம் - வீடியோ
கோடை அக்னி வெயில் மக்களை வாட்டி வரும் வேளையில் சேலம்,கிருஷ்ணகிரி மற்றும் ஊட்டியில் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.
சேலம்: சேலம்,கிருஷ்ணகிரி, ஊட்டி என தமிழகத்தின் பலபகுதிகளில் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சில இடங்களில் காற்றடித்து மரங்களும் சாய்ந்தன.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஆண்டுபருவ மழை பொய்த்த காரணத்தால் மக்கள் தண்ணீருக்கு அல்லாடி வருகின்றனர். மேலும் வெயிலும் கொளுத்தோ கொளுத்தென கொளுத்தி மக்களை துன்பப்படுத்தி வருகிறது.
குறிப்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குச் சென்று மக்களை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வந்தது. அதுவும் அக்னி வெயில் தொடங்கிய இரண்டாம் நாளில் வெயிலுக்கு சிலர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று சேலம்,கிருஷ்ணகிரி, ஊட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வெப்பத்தைத் தணித்தது. இதனால் இதுவரை வெயிலில் புழுங்கி வந்த மக்கள் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.
சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்த காரணத்தால் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஊட்டியில் மரங்கள் சில சாய்ந்து விழுந்த காரணத்தால் போக்குவரத்து பாதிக்கபப்ட்டது.
இதுவரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் மழைபெய்துள்ளது. ஆனால்,தலைநகர் சென்னையில் ஒரு துளி தூறல் கூட தூறாமல் வெயில் மக்களை வாட்டி வருகிறது.