அமளி துமளி... கூச்சல் குழப்பம் ஓய்ந்தது- சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் 15 சட்டசபையில் தமிழக பட்ஜெட் முதல் கூட்டத் தொடர் ஜூலை 25ம் தேதி துவங்கியது.
திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 25ம் தேதி தாக்கல் செய்தார். 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை அரசு துறைகளின் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
தினசரியும் அமளி
சட்டசபையில் திமுக 89 உறுப்பினர்களைக் கொண்டு பலமான எதிர்கட்சியாக இருப்பதால் தினசரியும் கூச்சல் குழப்பம், அமளி துமளி என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. தினசரியும் வெளிநடப்பு பின்னர் அவைக்கு திரும்புதல் என எதிர்கட்சியினர் செயல்பட்டனர்.
79 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்
இந்த கூட்டத்தொடரின் போது தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்.எல்.ஏ.,க்கள் 79 பேர் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. சஸ்பெண்டை எதிர்த்து திமுக நடத்தி போராட்டம், போட்டி சட்டசபை, சஸ்பெண்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கையெழுத்து போட்ட கருணாநிதி
திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி ஒருநாள் மட்டும் சட்டசபை வளாகத்திற்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு திரும்பினார். சட்டசபையில் அவரது சர்க்கரநாற்காலி செல்வதற்கு கூட வழியில்லை என்று திமுகவினர் குற்றம் சாட்டினர்.
மேயர் தேர்தல்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
110 விதியின் கீழ் அறிவிப்பு
அரசு வேலை செய்யும் மகளிருக்கு 9 மாதம் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை இந்த முறையும் முதல்வர் .ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்புகளாக வெளியிட்டார்.
சிறுவாணி தனி தீர்மானம்
கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர், சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு
கடைசி நாளான இன்று, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக்கூறினர். தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.