பத்தாம் வகுப்பு ரிசல்ட் மே 19ல் வெளியாகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி நாளை மறுநாள் வெளியாகும் என்றும் முடிவுகள் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் முடிவடைந்தன. இந்த தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12 ஆயிரத்து 187 பள்ளிகளில் 4,98, 406 மாணவர்கள், 4,95, 792 மாணவிகள் இந்த பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இது தவிர தனித் தேர்வர்களாக 43, 824 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 19ஆம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பிளஸ் 2 போல இந்த முறையும் ரேங்க் முறை அறிவிக்கப்பட மாட்டாது என்றும், கிரேடு முறையே அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மாணவர்கள், பெற்றோர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ரேங்க் முறை கைவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளிகளில் முதல் மூன்று இடங்களில் பிடித்த மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்களை நாளிதழ்களில் போட்டு விளம்பரம் செய்யக்கூடாது என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications